ஜி.கே.மணி வீட்டு கல்யாணம்-பங்கேற்பாரா ஜெ.?
சென்னை: பாமக தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன்- திருவள்ளூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் வலசை சந்திரசேகரனின் மகள் சத்யா இல்லத் திருமண அழைப்பிதழில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அவர் கல்யாணத்தில் கலந்து கொள்வாரா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
செப்டம்பர் 1ம் தேதி நடைபெறவுள்ள இந்த திருமண விழா சில நாட்களுக்கு முன்பு வரை பெரும் எதிர்பார்ப்புக்கு ஆளாகியிருந்தது. காரணம், டாக்டர் ராமதாஸும், ஜெயலலிதாவும் இதில் கலந்து கொள்வார்கள். அப்போது அதிமுக-பாமக கூட்டணிக்கு அடிக்கல் நாட்டப்படும் என பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
இந் நிலையில் திமுக கூட்டணியிலிருந்து பாமக நீக்கப்பட்டவுடன் இந்த எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் தற்போது திடீர் திருப்பமாக பாமக கூட்டணிக்கு வந்தால் கூட்டணி வலுவடையும் என்று முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார். அதை ராமதாஸ் நிராகரிக்கவில்லை. மாறாக, தேர்தல் சமயத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம் என்று மட்டும் சொல்லி வைத்துள்ளார்.
இந் நிலையில், ஜி.கே.மணி அடித்துள்ள திருமண அழைப்பிதழில் ஜெயலலிதாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ராமதாஸின் பெயர் மட்டுமே அதில் உள்ளது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ் தலைமையில், அவரது துணைவியார் சரஸ்வதி ராமதாஸ் முன்னிலையில், மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் வரவேற்புரை நிகழ்த்த திருமண விழா நடைபெறும் என்று மட்டும் ஜி.கே.மணி அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்த்துரையில் அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர் பெருமக்கள், நீதிபதிகள், சமய பெரியோர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தமிழறிஞர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், அதிகாரிகள், சான்றோர்கள் என பொதுவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் திமுக கூட்டணியில் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பை பாமக அதிகரித்துள்ளது.
இவ்வாராக, மாப்பிள்ளை வீட்டாரின் அழைப்பிதழில் ஜெயலலிதாவின் பெயர் போடப்படாததால், அவர் கல்யாணத்திற்கு வருவது சந்தேகம்தான் என்று கூறப்படுகிறது.
பெயர் போடாவிட்டாலும் கூட ஆகஸ்ட் 31ம் தேதி மாலை நடைபெறும் இந்தத் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா பங்கேற்கக் கூடும் என்று அதிமுக தரப்பில் கூறப்படுகிறது. இதனால் பாமகவை எப்படியாவது நெருங்கிவிட ஜெயலலிதா முயல்வது தெரிகிறது.