இன்டர்நெட் குற்றங்களைத் தடுக்க பள்ளிகளில் பிரசாரம்
சென்னை: இணைய தள குற்றங்கள் இரு மடங்கு அதிகரித்துள்ளது என்றும், மாணவர்கள் பாதுகாப்பாக இணையதளத்தை பயன்படுத்த வேண்டும் என்று சென்னை கமிஷனர் ஆர்.சேகர் தெரிவித்தார்.
சென்னை மாநகர காவல் துறையும், கூகுள் நிறுவனமும் இணைந்து மாணவர்கள் இணைய தளத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை 20 பள்ளிகளில் நடத்த திட்டமிட்டுள்ளது.
அதன் தொடக்க விழா ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஸரம் பள்ளியில் நடைபெற்றது. பிரசாரத்தை தொடங்கி வைத்து, கமிஷனர் சேகர் பேசியதாவது:
இணைய தளத்தை மாணவ, மாணவிகள் மிகவும் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும். இணையதளத்தில் அறிமுகம் இல்லாதவர்களிடம் தங்களது புகைப்படத்தையோ, போன் எண்களையோ மாணவர்கள் தரக்கூடாது.
கடந்த இரண்டு வாரங்களில் 14 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. விசாரணையில் மிரட்டல் விடுத்ததாக 14 மாணவர்களை பிடித்துள்ளோம். யார் மிரட்டல் விடுத்தாலும் உடனே போலீசார் கண்டுபிடித்து விடுவார்கள்.
மாணவர்களின் வாழ்க்கை கருதி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று பெற்றோர்கள் முறையிடுகிறார்கள். சிலரை மன்னித்து அறிவுரை கூறி அனுப்புகிறோம். எனினும், எதையும் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் இதுவரை 4 மாணவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2006ம் ஆண்டு 347ஆக இருந்த இணையதள குற்றங்கள், 2007ம் ஆண்டு இரு மடங்காக உயர்ந்துள்ளது. எனவே பள்ளி மாணவர்கள் விழிப்புடன் செயல்பட்டால் இதுபோன்ற குற்றங்களை தடுக்கலாம். இதை உணர்த்தவே இந்த பிரச்சாரம் நடத்தப்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications