சந்தேகம்: மனைவியை எரித்து தானும் இறந்த கணவன்
விளாத்திகுளம்: நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை தீவைத்து கொளுத்திய கணவன், எரிந்து கொண்டிருந்த மனைவியை கட்டிப் பிடித்தார். இதில் இருவரும் கருகி இறந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பூதலாபுரத்தைச் சேர்ந்த விவசாயி ராமநாதன், மனைவி பொன்னம்மாள். இவர்களுக்கு சுப்புலெட்சுமி, ரமாதேவி என்ற மகள்களும், பாலமுருகன் என்ற மகனும் உள்ளனர்.
சுப்புலெட்சுமி சென்னையி்ல் உள்ள செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மற்ற இருவரும் பள்ளியில் படித்து வருகின்றனர். பொன்னம்மாளின் நடத்தையை சந்தேகித்து அவருடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார் ராமநாதன். இதனால் குடும்பத்தில் தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று பொன்னம்மாள் சமையல் செய்து கொண்டிருந்தபோது ராமநாதனுக்கும் அவருக்கும் சண்டை மூண்டது.
பொன்னம்மாளை சரமாரியாக அடித்து உதைத்த ராமநாதன், அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். உடல் முழுவதும் தீ பரவியதில் பொன்னம்மாள் கதறி துடித்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமநாதன் பொன்னம்மாளை கட்டிப் பிடித்தார்.
இதில் ராமநாதன் உடலிலும் தீ பிடித்தது. அவரை விலக்கி விட்டு எரிந்து கொண்டே தெருவுக்கு ஓடிவந்தார் பொன்னம்மாள். இதை பார்த்த அப்பகுதியினர் பொன்னம்மாளை காப்பாற்ற முயன்றனர்.
அதற்குள் பொன்னம்மாள் பரிதாபமாக இறந்தார். பலத்த தீக்காயம் அடைந்த ராமநாதனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ராமநாதனும் பரிதாபமாக இறந்தார்.