சிங்கூர்- பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தார் மம்தா
சிங்கூர்: நானோ கார் தொழிற்சாலை பிரச்சனை தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த வருமாறு மேற்குவங்க ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி விடுத்த கோரிக்கையை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஏற்றுக் கொண்டுள்ளார்.
ஆனால் ஆலைக்கு வெளியில் தொடர்ந்து போராட்டம் நடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கூரில் குறைந்த விலை நானோ கார் தயாரிக்கும் தொழிற்சாலைக்காக 997 ஏக்கர் நிலத்தை டாடா நிறுவனம் வாங்கி உள்ளது. இந்த நிலத்தில் விவசாயிகளை கட்டாயப்படுத்தி வாங்கிய 400 ஏக்கர் நிலத்தை அவர்களிடமே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி திரிணாமுல் காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது.
இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அம்மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா விடுத்த அழைப்பை மம்தா பானர்ஜி நிராகரித்தார். அவருடைய கட்சியினர் காலவரையற்ற தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் தொழிற்சாலை கடந்த 3 தினங்களாக இயங்காமல் உள்ளது.
இந்நிலையில், பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என்று மம்தா பானர்ஜிக்கு அம்மாநில ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக மம்தாவுக்கு நேற்று முன் தினம் கடிதம் ஒன்றை அனுப்பினார். தொழிற்சாலை அல்லது அரசியல் தொடர்பு இல்லாத ஒருவரை நடுவராகக் கொண்டு பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காணும்படி ஆளுநர் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து தனது கட்சி நிர்வாகிகளுடன் மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்தினார். நேற்று அவருடைய கட்சி பிரதிநிதிகள் ஆளுநரை சந்தித்து பேசினர். இதைத் தொடர்ந்து பேச்சு வார்த்தைக்கு மம்தா பானர்ஜி சம்மதம் தெரிவித்தார். அதே சமயம் தொழிற்சாலைக்கு வெளியே போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தையில் யார் பங்கேற்பது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். கார் தொழிற்சாலை 600 ஏக்கர் நிலத்திலேயே இயக்க முடியும். எனவே 400 ஏக்கர் நிலத்தை விவசாயிகளுக்கு திரும்ப கொடுக்க வேண்டும். இதில் அரசும், டாடா நிறுவனமும் பிடிவாதம் செய்ய கூடாது என்று மம்தா பானர்ஜி கூறினார்.












Click it and Unblock the Notifications