பிரதமர், கருணாநிதி, சோனியாவுக்கு டாக்டர் பட்டம்
சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் 150வது ஆண்டு விழாவையொட்டி செப்டம்பர் 5ம் தேதி நடைபெறவுள்ள சிறப்பு பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமச்சந்திரன் இத்தகவலைத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பாடுபட்டதற்காகவும், மதச்சார்பற்ற தன்மை மற்றும் ஜனநாயகம் தழைத்தோங்க அவர் ஆற்றி வரும் சேவையை கெளரவப்படுத்தும் வகையில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
நாட்டின் அனைத்துப் பிரிவினருக்கும் பாடுபட்டு வருவதற்காகவும், மதச்சார்பற்ற கொள்கையை உயர்த்திப் பிடித்துள்ளதற்காகவும் சோனியா காந்திக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
தமிழ் மொழியின் மறுமலர்ச்சி, திராவிட இயக்கத்தின் வளர்ச்சி, சமூக நீதிக்கான உழைப்பு ஆகியவற்றைப் பாராட்டும் வகையில் முதல்வர் கருணாநிதிக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
இந்த விழாவில் ஐ.நா. தொழில் வளர்ச்சிக் கழக இயக்குநர் டாக்டர் காந்தே யும்கெல்லாவுக்கும் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும்.
பல்கலைக்கழகம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 39 நினைவு மலர்களையும் நான்கு பேரும் சேர்ந்து வெளியிடுவர்.
தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான சுர்ஜித் சிங் பர்னாலா தலைமை தாங்குவார். உயர்கல்வி அமைச்சர் டாக்டர் பொன்முடியும் விழாவில் பங்கேற்கிறார்.
இந்த விழாவைத் தொடர்ந்து, கிண்டி மற்றும் தரமணி வளாகத்தில் கட்டப்படவுள்ள புதிய கட்டடங்களுக்கான அடிக்கல்லை சோனியா காந்தி நாட்டுகிறார். சேப்பாக்கத்தில் நுழைவாயில் கட்டுவதற்கான அடிக்கல்லையும் அவர் நாட்டுகிறார்.
தரமணி வளாகத்தில் கட்டப்படவுள்ள புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லை முதல்வர் கருணாநிதி நாட்டுகிறார்.
இந்த மூன்று கட்டடங்களும் தலா ரூ. 25 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ளன. மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் நிதி நிறுவனங்கள் இதற்கு நிதியுதவி செய்கின்றன என்றார் அவர்.












Click it and Unblock the Notifications