இஸ்ரேல் சிறையில் வாடும் 7 தமிழர்கள்: மீட்க கோரிக்கை
சென்னை: வேலை தேடி இஸ்ரேல் சென்ற 7 தமிழர்கள் உள்பட 25 இந்தியர்கள் இஸ்ரேல் சிறையில் அடைபட்டுள்ளனர். அவர்களை மீட்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டில் வேலை தேடி கடந்த ஆண்டு டிசம்பர் 3ம் தேதி 10 பேர் இந்தியாவில் உள்ள அயல்நாட்டு வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனத்தின் மூலம் இஸ்ரேல் நாட்டு தலைநகரான டெல்அவிவ் நகருக்கு சென்றனர். விமான நிலையத்தில் அவர்களிடம் வேலை பெர்மிட்டுக்காக தலா 5,000 அமெரிக்க டாலர்கள் கட்டணமாக பெறப்பட்டது.
ஆனால், பணத்தை இழந்ததுதான் மிச்சம். வேலை கிடைக்கவில்லை. இவர்களில் பெரும்பாலோர் விசிட் விசாவில் இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விசா காலத்துக்கு மேல் அவர்கள் அந்நாட்டில் தங்கியிருந்தது வேலை தேடியதால் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
5 இந்தியர்கள் தலா 9,000 அமெரிக்க டாலர்கள் கொடுத்துவிட்டு வேலைக்காக இஸ்ரேல் விமான நிலையத்தில் சென்று இறங்கியபோது அவர்களை அழைத்துச் செல்ல யாருமே வரவில்லை. யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்பதும் தெரியவில்லை.
இதுபோல வேலை தேடி இஸ்ரேலுக்கு சென்ற 25க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேர் தமிழர்கள் என்று இஸ்ரேலில் பணிபுரிபவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் "காவ் லாஓவட்' என்ற தொண்டு அமைப்பு கூறியுள்ளது.
இதையடுத்து இந்த தொண்டு அமைப்புடன் சென்னையில் உள்ள ஒரு தொண்டு அமைப்பைச் சேர்ந்த டாக்டர் பெர்னார்ட் டி சாமி என்பவர் தொடர்பு கொண்டு விசாரித்தார். முறையான பணி நியமன ஆவணங்களின்றி இஸ்ரேல் சிறைகளில் இந்தியர்கள் வாடிக் கொண்டிருப்பதை நாங்கள் கேள்விப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இதுபோன்ற அவலத்தைப் போக்க வெளியுறவு அமைச்சகம், அயல் நாட்டு வாழ் இந்தியர் விவகார அமைச்சகம், குடியேற்ற துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று டாக்டர் பெர்னார்ட் கூறினார்.












Click it and Unblock the Notifications