அதிமுகவுடன் கூட்டணி பரிசீலிக்கப்படும்: சிபிஐ
தூத்துக்குடி: மதசார்பற்ற கொள்கையில் அதிமுக உறுதியாக இருந்தால், கம்யூனிஸ்ட் கட்சிகள் அக்கட்சியுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக பரிசீலிக்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் தேசிய குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் வ.உ.சி சுதேசி கப்பல் கடலில் பயணித்த நூற்றாண்டு விழா நடந்தது. வ.உ.சி கல்வி குழு செயலாளர் ஏ.பி.சி.வீ. சொக்கலிங்கம் தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்ட ஆர்.நல்லகண்ணு பேசியதாவது:
தன் வாழ்நாள் முழுவதையும் சுதந்திர போரட்டத்திற்காக அர்பணித்த முதல் தலைவர் வ.உ.சி.தான். வரலாற்றில் இடம் பிடித்த யாரும் செய்யத் துணியாத போராட்டத்தை துணிந்து செய்தவர். அதற்காக அவர் அனுபவித்த கஷ்டங்கள் அனைவரும் அறிந்ததே.
சுதேசி கப்பல் இயக்கத்தை 1906ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதிவு செய்தார். 17.4. 907ம் ஆண்டு வெள்ளையர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் துணிந்து இரண்டு கப்பலகளை வாங்கி சுதந்திர முழக்கமிட்டார் வ.உ.சி. அதில் ஒன்று பயணிகள் கப்பல். மற்றொன்று சரக்கு கப்பல். இது உன்னதமான முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகும்.
இந்தியாவில் முதன்முதலில் தொழிற்சங்கத்தை தொடங்கியவரும் அவர்தான் என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது. இந்தியா, அணு ஆயுத சோதனை நடத்தினால், அணு ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று அமெரிக்க அதிபர் புஷ் கூறியுள்ளார்.
இதற்கு மத்திய அரசு என்ன பதில் கூறப்போகிறது. நாட்டின் மின் தேவையை அணு ஒப்பந்தம் பூர்த்தி செய்யும் என்பது உண்மையல்ல.
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ரூ.1க்கு கிலோ அரிசி வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். ஆனால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மிக அதிகமாக உயர்ந்துள்ளது.
அவற்றின் விலைகளை குறைப்பதற்கும், மின் தட்டுப்பாட்டை போக்குவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் பாஜக, காங்கிரஸ் அல்லாத கட்சிகளுடன் கூட்டணி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதசார்பற்ற கொள்கையில் அதிமுக உறுதியாக இருந்தால், கம்யூனிஸ்ட் கட்சிகள் அக்கட்சியுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக பரிசீலிக்கும் என்றார்.