விநாயகர் ஊர்வலத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: 3 பேர் கைது
தக்கலை: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நடந்த விநாயகர் ஊர்வலத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் 3 பேர் காயமடைந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நேற்று முன்தினமும், நேற்றும் நீர்நிலைகளில் கரைக்கப்பட்ன. முதல் நாளில் திண்டுக்கல்லில் மோதல் ஏற்பட்டது.
நேற்று தக்கலையில், பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தக்கலை பகுதியில் இந்து முன்னணி சார்பில் 153 சிலைகள் கரைக்க எடுத்துச் செல்லப்பட்டன. திருவிதாங்கோடு பகுதியில், சிலைகள் வந்தபோது அங்கு இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
கடைகள் சூறையாடப்பட்டன. போலீஸார் விரைந்து வந்து அங்கு நடந்த மோதலை அடக்கினர். ஊர்வலம் தொடர்ந்து செல்ல வழி ஏற்படுத்தினர். பாதுகாப்புடன் விநாயகர் சிலை தொடர்ந்தது.
2 மணியளவில் அழகியமண்டபம் பகுதியில் ஊர்வலம் வந்தபோது திடீரென ஒரு கும்பல் பெட்ரோல் குண்டு வீசித் தாக்கியது. இதில் ஒரு கடையில் தீப்பிடித்துக் கொண்டது. கடை முழுவதும் எரிந்து சாம்பலானது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்து தீயை அணைக்க நடவடிக்கை எடுத்தனர். இதேபோல துரப்பு என்ற இடத்தில் கல்வீச்சு நடந்தது. இதில் மினி பஸ்ஸின் கண்ணாடி உடைந்தது. விக்னேஷ் என்பவர் காயமடைந்தார்.
இந்த நிலையில், விநாயகர் சிலைகளைக் கரைத்து விட்டு வீடுதிரும்பிய அஜீத் குமார், கிஷோர்குமார் ஆகியோரை ஒரு கும்பல் மறித்து கம்பியால் குத்தியதில் இருவரும் படுகாயமடைந்தனர். உடனடியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர்களை அனுமதித்தனர்.
சென்னையில் ராம.கோபாலன் கைது:
சென்னையிலும், புறநகர்களிலும் நேற்று 2வது நாளாக விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. அனைத்துப் பகுதிகளிலும் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. நகரில் மட்டும் 5000க்கும் மேற்பட்ட சிலைகள் கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.
சிலைகள் ஊர்வலத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்தது. மாதவரத்தில், கிறிஸ்தவ சர்ச் மற்றும் மசூதி வழியாகவும் ஊர்வலம் சென்றது. அப்பகுதியில் முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தது மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது.
மாதவரம் மாத்தூர் பகுதியில், பாதிரியார் வெஸ்லி தலைமையில் திரண்ட கிறிஸ்தவர்கள் ஊர்வலத்தில் வந்தவர்களுக்கு கூல் டிரிங்க்ஸ் கொடுத்து உபசரித்தனர். அதேபோல மாத்தூர் 3வது மெயின் ரோட்டில் உள்ள மசூதி அருகே ஊர்வலம் வந்தபோது முஸ்லீம்கள், ஜமாத் தலைவர் உமர் கத்தாப் தலைமையில் திரண்டு வந்து வரவேற்றனர். ஊர்வலத்தில் வந்த இந்து தலைவர்களுக்கு சால்வைகளும் அணிவிக்கப்பட்டன.
இந்த நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன், திருவெட்டீஸ்வரர் கோவில் தேரடி பகுதியிலிருந்து விநாயகர் சிலைகளுடன் ஊர்வலமாக கிளம்பினார். அந்த திடீர் ஊர்வலம் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலைக்கு வந்தது.
ஐஸ் ஹவுஸ் மசூதி வழியாக ஊர்வலமாக செல்ல அவர்கள் முயன்றனர். இதையடுத்து போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். மீறிப் போவேன் என ராம.கோபாலன் கூறியதால், அவர் உள்பட 27 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications