தேனி: கட்அவுட் விழுந்து அதிமுக தொண்டர் பலி
தேனி: தேனியில் அதிமுக பொதுக் கூட்டத்துக்காக வைக்கப்பட்ட கட் அவுட் முறிந்து விழுந்ததில் அக்கட்சித் தொண்டர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். மேலும் 9 பேர் காயமடைந்தனர்.
அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு அதிமுக சார்பில் தேனியில் நேற்று பொதுக் கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்து கொண்டார். இந்த கூட்டத்துக்கு கட்சித் தொண்டர்கள் அதிகளவில் வந்திருந்தனர்.
பொதுக் கூட்டம் நடக்கும் இடம் உள்பட நகரின் பல பகுதிகளில் கட்-அவுட் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது கட்-அவுட் ஒன்று திடீரென முறிந்து கூட்டத்தினர் மீது விழுந்தது.
இதில் அக்கட்சியின் தொண்டர் சலீத் (65) என்பவர் படுகாயமடைந்தார். உயருக்கு ஆபத்தான நிலையில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கட்சி தலைவர் ஒருவர் கூறுகையில், கூட்டத்துக்கு போலீஸார், போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜெயலலிதா ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். அவரை பார்க்க மக்கள் ஆர்வம் காட்டியதில் நெரிசல் ஏற்பட்டது. பாதுகாப்பு அதிகாரிகளால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் குறைவாக இருந்தது என்று அவர் கூறினார்.