திமுக அரசு சொல்லாததையும் செய்யும்: ஸ்டாலின்
சென்னை: வாக்குறுதிகளை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்யும் ஆட்சிதான் கருணாநிதியின் ஆட்சி என்று கூறினார் அமைச்சர் ஸ்டாலின்.
ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி திட்டத்தை முதல்வர் கருணாநிதி நேற்று தொடங்கி வைத்தார். இன்று மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் அமைச்சர்கள், திமுக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின், தனது ஆயிரம் விளக்கு தொகுதிக்குப்பட்ட தேனாம்பேட்டையில் நடந்த விழாவில் இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கோரப்பட்டது. அதை முதல்வர் நிறைவேற்றியுள்ளார்.
1967ம் ஆண்டு அண்ணா முதல்வராக பதவியேற்றபோது ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி வழங்குவேன் என்று கூறினார். சில காரணங்களால் அந்த வாக்குறுதியை முழு அளவில் நிறைவேற்ற முடியவில்லை.
2006ம் ஆண்டு 5வது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற கருணாநிதி, பல வாக்குறுதிகளை தந்தார். அதில் ஒன்றுதான் ரூ.2க்கு கிலோ அரிசி.
2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியை எப்படி கொடுக்க முடியும் என்று எதிர்க்கட்சியினர் கேட்டனர். ஆனால் நீங்கள் நம்பிக்கையோடு கருணாநிதியின் ஆட்சி மலர ஆதரவு தந்தீர்கள்.
அவர் முதல்வர் பொறுப்பேற்ற முதல் நாளே ரூ.2க்கு கிலோ அரிசி திட்டத்தை அமல்படுத்தினார். அந்த திட்டம் வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுக்கிறோம். சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்யும் ஆட்சிதான் கருணாநிதி ஆட்சி.
சத்துணவில் வாரம் 2 முட்டை தருவோம் என்றோம். ஆனால் வாரம் 3 முட்டை கொடுத்து வருகிறோம். திருமண உதவித் தொகை ரூ.15,000 கொடுக்கப்படும் என்று உறுதி கொடுத்தோம். ஆனால் ரூ.20,000 வழங்கி வருகிறோம்.
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் சென்னையில் 18 லட்சத்து 16,000 குடும்பங்கள் பயன் பெறும். ஆயிரம் விளக்கு தொகுதியில் மொத்தம் 90,000 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் 72,160 குடும்ப அட்டைதாரர்கள் அரிசி பெற தகுதி உடையவர்கள் என்றார்.
பின்னர் சேப்பாக்கம் தொகுதியிலும் இந்த திட்டத்தை ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மண்ணடி லிங்கசெட்டி தெருவில் நடந்த விழாவில் நிதியமைச்சர் அன்பழகன் திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:
32 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா ரூபாய்க்கு படி அரிசி திட்டத்தை கொண்டு வர முயற்சி செய்தார். அது முடியவில்லை. அவரது கொள்கை, லட்சிய கனவு இன்று நிறைவேறியுள்ளது. ஏழைகள் நலன் கருதி இந்த ஆட்சி செயல்பட்டு வருகிறது.
12 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சி செய்தபோது ஒரு கிலோ அரிசி ரூ.3க்கு வழங்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சிகள் அது முடியாது என்றனர். ஆனால் செயல்படுத்தினோம். நஷ்டம் ஏற்பட்டாலும் தொடர்ந்து அந்த திட்டத்தை அமல்படுத்தினோம்.
அது போல ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி திட்டமும் தொடர்ந்து செயல்படும். குறைகள் எது இருந்தாலும் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்றார்.












Click it and Unblock the Notifications