வனத்துறை ஜீப்பில் 15 நாட்களாக 'குடியிருந்த' மலைப் பாம்பு
கிருஷ்ணகிரி: வனத்துறைக்கு சொந்தமான ஜீப்பில் 15 நாட்களாக பதுங்கியிருந்த மலைப்பாம்பு நீண்ட போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்டு காட்டில் விடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்கடி பகுதியில் கடந்த 5ம் தேதி மலைப்பாம்பு ஒன்று நடமாடி வருவதாக ராயக்கோட்டை வனத்துறையினரிடம் பொதுமக்கள் புகார் கூறினர்.
இதையடுத்து அங்கு சென்ற வனத்துரையினர் பாம்பைப் பிடித்து அதை சாக்குப் பையில் போட்டு ஆலப்பட்டி காட்டுக்குக் கொண்டு வந்தனர்.
அங்கு சென்று பார்த்தபோது பை திறந்து கிடந்தது. அதில் பாம்பு இல்லாததை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தாங்கள் ஜீப்புக்குள் சோதனை செய்தனர். ஆனால் பாம்பு கிடைக்கவில்லை. பின்னர் அலுவலகத்துக்கு சென்று விட்டனர்.
இந்த நிலையில் நேற்று ஜீப் டிரைவர் வண்டியை ஓட்டிச் சென்றார். ஜீப்பின் கியர் பாக்ஸில் வழவழப்பாக ஏதோ தட்டுப்பட்டதை உணர்த்து என்னவென்று பார்த்தார்.
அப்போதுதான் அது மலைப்பாம்பு என்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் ஜீப்பை அங்குள்ள மெக்கானிக் ஷெட்டுக்கு கொண்டு சென்றார்.
அங்கு சுமார் 4 மணி நேரம் போராடி மலைப்பாம்பை உயிருடன் மீட்டனர். சுமார் 15 அடி நீளமுள்ள அந்த பாம்பு, 15 நாட்களுக்கு முன் சோக்காடியில் இருந்து ஆலப்பட்டிக்கு கொண்டு செல்லும்போது காணாமல் போன பாம்பு என்பது தெரியவந்தது.
இந்த முறை மிகுந்த கவனத்துடன் பாம்பை மகாராஜா கடை காப்பு காட்டில் கொண்டு போய் பாம்பை விட்டு விட்டு வந்தனர்.
இதில் பயங்கரம் என்னவென்றால் - இந்த 15 நாட்களில் பலமுறை வாட்டர் சர்வீஸ், ஆயில் சர்வீஸுக்கு ஜீப் போயிருந்தது. மேலும் அதிகாரிகள் இந்த ஜீப்பிலேயே சென்னை வரைக்கும் போய் வந்துள்ளனராம்.