பெண்ணிடம் சங்கிலி பறித்த போலிச் சாமியார்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் குமரிக்கோட்டம் முருகன் கோவிலுக்கு வந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினார் போலிச் சாமியார் ஒருவர். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தைச் ேசர்ந்தவர் விஜயன். இவருடைய மனைவி பரிமளா. இவருக்கு வயது 18. இவர் குமரிக்கோட்டம் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார்.
அப்போது அவரை அணுகிய ஒரு சாமியார், பரிகார பூஜை செய்தால் உன்னைப் பிடித்த அனைத்து துயரங்களும் விலகி விடும் என உபதேசம் செய்துள்ளார்.
இதை நம்பிய பரிமளா, என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த சாமியார், கோவிலிலேயே வைத்து ஒரு பூஜையை செய்துள்ளார். அப்போது பரிமளாவுக்கு மயக்கம் ஏற்பட்டது. அவர் மயங்கியதும், பரிமளா அணிந்திருந்த நான்கரை பவுன் தங்கச் சங்கிலியை எடுத்துக் கொண்டு எஸ்கேப் ஆகி விட்டார் போலிச் சாமியார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து பரிமளாவுக்கு மயக்கம் தெளிந்தது. அப்போதுதான் நடந்தது என்ன என்று தெரிய வந்தது. இதையடுத்து பெரிய காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார்.
கோவிலிலேயே நடந்த இந்த துணிகர திருட்டு தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து போலிச் சாமியாரைத் தேடி வருகின்றனர்