எச்ஐவி ஜோடி-திருமணம் நடத்திய அன்பாலயம்
திருச்சி: எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கா தொடங்கப்பட்ட திருச்சி அன்பாலயம், திருமண தகவல் மையம் மூலம் முதல் எச்.ஐ.வி. ஜோடிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
திருச்சி சுப்ரமணியபுரத்தில் அன்பாலயம் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார் செந்தில்குமார். எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படும் வகையில் இந்த அமைப்பின் சார்பில் திருமண தகவல் மையம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலேயே எய்ட்ஸ் நோயாளிகளுக்காக தொடங்கப்பட்ட முதல் திருமண தகவல் மையம் இதுதான். மணமகள் தேவை என்று நூற்றுக்கும் மேற்பட்டோரும், மணமகன் தேவை என்று எய்ட்ஸ் பாதித்த சில பெண்களும் பதிவு செய்திருந்தனர்.
அப்படி பதிவு செய்தவர்களில் மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கும், திருச்சி காஜாமலை அரசினர் காப்பகத்தில் உள்ள ராதிகாவுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
அதன்படி திருச்சி காஜாமலை அரசினர் காப்பகத்தில் இருவருக்கும் நேற்று காலை திருமணம் நடந்தது. அன்பாலயம் செந்தில்குமார், காப்பக கண்காணிப்பாளர் மருதம்மாள் உள்பட பல சிறப்பு விருந்தினர்களும் உறவினர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அன்பாலயம் சார்பில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோர் திருமணம் மூலம் எதிர்காலத்தை வளப்படுத்திக் கொள்ள அன்பாலயம் தொண்டு நிறுவனத்தை அணுகலாம். 94431-67607 என்ற எண்ணில் செந்தில்குமாரை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.