சென்னையில் 5 அரசு சொகுசுப் பேருந்துகள் எரிந்து சாம்பல்
சென்னை: சென்னை கலைஞர் கருணாநிதி நகர் அரசுப் பேருந்து டெப்போவில் நிறுத்தப்பட்டிருந்த ஐந்து சொகுசுப் பேருந்துகள் தீயில் கருகி முழுமையாக சேதமடைந்தன.
கலைஞர் கருணாநிதி நகர் டெப்போவில் தினசரி சேவை முடிந்து நூற்றுக்கும் மேற்பட்ட நகரப் பேருந்துகள் நிறுத்தப்படும். இந்தப் பேருந்துகளில் பல, சொகுசுப் பேருந்துகள் ஆகும்.
நேற்று இரவும் வழக்கம் போல பஸ்கள் அனைத்தும் டெப்போவில் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது இரவு 11 மணியளவில் ஒரு சொகுசுப் பேருந்தில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. அதில் பிடித்துக் கொண்ட தீ அருகில் இருந்த மற்ற சொகுசுப் பேருந்துகளுக்கும் பரவியது.
தகவல் அறிந்ததும் தீயணைப்புப் படை வீரர்கள் 30 பேர் 7 வண்டிகளில் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் 5 பேருந்துகள் தீயில் கருகி முழுமையாக சேதமடைந்து விட்டன.
இவற்றின் மதிப்பு ரூ. ஒன்றரை கோடியாகும். தீயைணப்புப் படையினர் விரைந்து செயல்பட்டதால், மற்ற பேருந்துகள் தப்பின.
முதலில் தீப்பிடித்த சொகுசுப் பேருந்தில் ஏற்பட்ட மின் கசிவே விபத்துக்குக் காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.