சின்னமனூர் நகராட்சி கலைப்பு: அரசுக்கு கெடு
மதுரை: சின்னமனூர் நகராட்சி கலைப்பு விவகாரத்தில் வரும் 4 வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கெடு விதித்துள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சித் தலைவராக இருப்பவர் தமிழ்செல்வி. இவர் திமுகவை சேர்ந்தவர்.
இவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் சட்ட விரோத கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு நகராட்சி கவுன்சிலர்கள் வற்புறுத்தி வருகின்றனர். அதற்கு நான் மறுக்கவே என் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர்.
காண்டிராக்ட் கமிஷனை பங்கு போடுவது குறித்தும், வேலை நியமனத்தில் பணத்தை பங்கு போடுவது குறித்தும், ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். ஆனால் இந்த தீர்மானத்தில் நான் கையெழுத்திடவில்லை.
இந்த நிலையில் என் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனரிடம் மனு அளித்துள்ளனர். இந்த மனுவை அவர் ஏற்றுக்கொண்டு நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்ற அனுமதி அளித்துள்ளார்.
இந்த மனு நிறுவையில் உள்ள போது, நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்ற அனுமதி அளித்த கூட்டத்திற்கு தடை விக்க வேண்டும்.
சின்னமனூர் நகராட்சியை உடனே கலைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை சென்னை உயர் நீதி மன்ற மதுரைக் கிளை விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் சின்னமனூர் நகராட்சியை ஏன் கலைக்க கூடாது என்று கேட்டு தமிழக அரசு நோடீஸ் அனுப்பியது.
இந்தப் பின்னணியில், சின்னமனூர் நகராட்சி தொடர்பான வழக்கு நீதிபதி சந்துரு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரக்கூடாது. சின்னமனூர் நகராட்சியை ஏன் கலைக்க கூடாது என்று தமிழக அரசு நோடீஸ் அனுப்பியுள்ளது. எனவே இந்த நோட்டீஸ் மீது தமிழக அரசு 4 வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கெடு விதித்து உத்தரவிட்டார்.