கர்நாடகத்தில் லாரி ஸ்டிரைக்-எல்லையில் முடங்கிய தமிழக லாரிகள்
ஒசூர்: லாரிகளுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என்ற சட்டத்தை திரும்பப் பெறகி கோரி கர்நாடகா லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், தமிழக-கர்நாடகா எல்லையில் ஆயிரக்கணக்கான லாரிகள் அணிவகுத்து நிற்கின்றன.
கர்நாடகா மாநிலத்தில் லாரிகளுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என்று கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என கோரி அம்மாநில லாரி உரிமையாளர்கள் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இந் நிலையில் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் ஆதரவு அளித்துள்ளது.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக ஒசூர் வழியாக கர்நாடம் செல்லும் லாரிகளும், கர்நாடகம் வழியாக வட மாநிலங்களுக்குச் செல்லும் தமிழக லாரிகளும் எல்லைப் பகுதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
கர்நாடகத்தில் இந்த லாரிகள் வேலை நிறுத்தத்தால் சமையல் எரிவாயு, காய்கறிகள் சப்ளை பெருமளவில் பாதிக்கப்படவுள்ளது.