ஈழத் தமிழர்களைக் காக்க நடவடிக்கை: கருணாநிக்கு பிரதமர் உறுதி
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இலங்கையில் ராணுவத் தாக்குதலிலிருந்து தமிழர்களைக் காக்கக் கோரி பிரதமருக்கு லட்சக்கணக்கில் தந்திகள் அனுப்புமாறு முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையடுத்து இன்றுகாலை முதல்வர் கருணாநிதியை, பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இலங்கையில் ராணுவம் நடத்தி வரும் இனப்படுகொலை குறித்து முதல்வர் கருணாநிதி, பிரதமரிடம் புகார் கூறினார். இலங்கை ராணுவத்தின் தாக்குதலிலிருந்து லட்சக்கணக்கான தமிழர்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
மேலும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதைத் தடுத்து விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். டெல்லியில் உள்ள இலங்கை தூதரை அழைத்து கண்டனம் தெரிவிக்க வேண்டும் எனவும் முதல்வர் கோரிக்கை விடுத்தார்.
இதைக் கேட்டுக் கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் முதல்வர் தெரிவித்த அனைத்து வேண்டுகோள்களையும் நிறைவேற்ற உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.