போதை விருந்து: நடிகர் மகன் உள்பட 250 பேர் சிக்கினர்
மும்பை: மும்பையில் உள்ள ஒரு நைட் கிளப்பில் நடந்த போதை விருந்தில் 250 பேர் சிக்கினர். இவர்களில் பிரபல இந்திய நடிகர் சக்தி கபூரின் மகனும் ஒருவராவார்.
மும்பையில் பாம்பே 72 டிகிரி ஈஸ்ட் என்ற நைட் கிளப் உள்ளது. இங்கு இரவு நேரங்களில் அதிகளவில் போதை விருந்துகள் நடத்தபதாகவும், போதை பொருள் சப்ளை செய்யப்படுவதாகவும் போதை தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போதை தடுப்பு பிரிவு போலீஸார் அந்த நைட் கிளப்பில் அதிரடி ரெய்ட் நடத்தினர். அப்போது போதை பொருள் உட்கொண்ட ஏராளமான இளைஞர்களும் இளம்பெண்களும் அரைகுறை ஆடையுடன் போதையில் ஆபாசமாக நடனமாடிக் கொண்டிருந்தனர்.
அங்கிருந்த 250 பேரையும் போலீஸார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். அவர்களில் பிரபல இந்தி நடிகர் சக்தி கபூரின் மகன் சிதாந்த் என்பவரும் ஒருவர் என்பது தெரியவந்தது. இவர் இந்த கிளப்பின் டிஸ்கோ நடன அமைப்பாளராக பணியாற்றுகிறார். போலீஸார் பிடித்தபோது அவர் போதையில் இருந்தாரா என்பது தெரியவில்லை.
பிடிபட்டவர்களில் 242 பேர் போதையில் நடனமாடியும் கேளிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தவர்கள். அவர்கள் போதை மருந்து உட்கொண்டிருந்தார்களா என்று அறிய மருத்துவ சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பெண் மற்றும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த 8 பேர் போதை மருந்து சப்ளை செய்தவர்கள்.
அவர்களிடம் இருந்து எஸ்எஸ்டி மருந்து, எக்ஸ்டசி, கன்னாபிஸ் போன்ற போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அவர்கள் 8 பேரையும் போலீஸார் கைது செய்தனர். பிடிபட்ட 250 பேரிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நைட் கிளப்பில் பிடிபட்ட பெண்களை போட்டோகிராபர் ஒருவர் போட்டை எடுக்க முயன்றார். அவரை சில பெண்கள் தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.