ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும்: திருநாவுக்கரசர் கோரிக்கை

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சமீபகாலமாக பல இடங்களில் இதனை வலியுறுத்தி குரல் கொடுக்க துவங்கியுள்ளனர். எனவே நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட வேண்டும்.
அவருக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது. தேசியத்திலும், தெய்வீகத்திலும் நம்பிக்கை கொண்டுள்ளவர் அவர். அவர் அரசியலில் ஈடுபட்டால் அதற்கு மக்கள் வரவேற்பு கிடைக்கும். தனிக்கட்சி துவங்கி அரசியலில் ஈடுபடுவதா அல்லது ஏதேனும் ஒரு கட்சியில் இணைந்து செயல்படுவதா என்பது குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.
கூட்டணியை பொறுத்தவரை திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் தவிர, மற்ற எந்தக் கட்சியுடனும் கூட்டணி குறித்து பேச்சு நடத்த தயார். அதிமுகவும், பாஜகவும் பல்வேறு பிரச்சனைகளில் ஒத்தக் கருத்துடன் இருப்பதால் அவர்களுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகளை தாக்குவதாக கூறி அப்பாவி தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசை மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும்.
கருணாநிதி - தந்தி - வேடிக்கை:
இலங்கை பிரச்சனையில் தலையிடக்கோரி பிரதமருக்கு தந்திகள் அனுப்புவீர் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுக இது பற்றி நேரடியாக பிரதமரிடம் பேச வேண்டும்.
சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர், தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது குறித்து அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவிடம் பேசியதாக தெரியவில்லை. எல்லையில் கூட்டு ரோந்து நடத்த ஒப்புக் கொள்ள முடியாது.
நான்கரை ஆண்டுகால ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் எந்த பயங்கரவாதியும் தண்டிக்கப் படவில்லை. பயங்கரவாதிகளிடம் அரசு மென்மையான போக்கை கடைப்பிடித்து வருகிறது. பொடா போன்ற கடுமையான சட்டம் கொண்டு வரப்படவேண்டும். காவல்துறையை நவீனப்படுத்தப்பட வேண்டும்.
அகண்ட அலைவரிசை ஒதுக்கீட்டில் ரூ.50 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் மத்திய அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications