நானோ: எல்லாப் புகழையும் தானே தட்ட முயல்கிறார் மோடி - காங்.
அகமதாபாத்: நானோ தொழிற்சாலை குஜராத்துக்கு வந்துள்ளதற்கு தான்தான் முழுக் காரணமும் என்பது போல முதல்வர் நரேந்திர மோடி பேசுவது கண்டனத்துக்குரியது என்று குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி வர்ணித்துள்ளது.
இதுகுறித்து மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அர்ஜூன மோத்வாடியா கூறுகையில், நானோ தொழிற்சாலை குஜராத்துக்கு வந்துள்ளதற்கு பாஜகவும், அதன் பரிவாரங்களும் கொடுத்துள்ள மிகப் பெரிய வரவேற்பும், மிகப் பெரிய சலுகைகளும், ஏதோ குஜராத் மக்களுக்கு டாடா நிறுவனம் அனைத்தையும் இலவசமாகவே தரப் போவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நானோ வருகையை காங்கிரஸ் எதிர்க்கவில்லை. ஆனால் மோடி, ஏதோ தன்னால்தான் இதெல்லாம் நடந்தது என்பது போல நடந்து கொள்கிறார். இதை காங்கிரஸ் கண்டிக்கிறது. அத்தனை பெயரையும் அவரே எடுத்துக் கொள்ள முயலுகிறார்.
மிகக் குறைந்த விலையில் விவசாய பல்கலைக்கழகத்தின் நிலத்தை டாடா நிறுவனத்திற்கு மோடி அரசு கொடுத்துள்ளது. அதேபோல டாடாவுக்கு கொடுத்த அதே அளவிலான சலுகைகளை பிற நிறுவனங்களுக்கும் கொடுக்க மோடி முன்வர வேண்டும்.
டாடா போன்ற பெரிய நிறுவனங்குக்குப் பரிவு காட்டுவதற்குப் பதில் நலிவடைந்த நிலையில் உள்ள ஜெட்பூர் சேலை நிறுவனங்கள், ராஜ்கோட்டில் உள்ள பொறியியல் நிறுவனங்கள், சூரத்தில் உள்ள வைர ஆலைகள், ஜவுளி ஆலைகளுக்கு மோடி அரசு அதிக அக்கறையும், சலுகையும் காட்ட வேண்டும்.
இந்த நிறுவனங்களுக்கு மோடி அரசு எந்தவித சலுகையும் கொடுப்பதில்லை. டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன்பு எதிர்க்கட்சிகளின் கருத்தையும் மோடி அரசு அறிந்திருக்க வேண்டும்.
மிகப் பெரிய தொழில் நிறுவனங்கள், தங்களது தொழிற்சாலைகளை அமைப்பதற்கு முன்பு மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். இதற்கு சிங்கூர் அனுபவமே நல்ல பாடமாகும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications