கைது செய்யப்பட்ட இந்து முன்னணியினரை விடுவிக்க ராம.கோபாலன் கோரிக்கை
சென்னை: தேவாலயங்கள் தாக்கப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்து முன்னணி தொண்டர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
விழுப்புரத்தில், சென்னை நெடுஞ்சாலையில், காட்பாடி ரயில்வே கேட் அருகில் சிலுவைகளை உடைத்ததாக கண்ணன், துரை ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்களில் கண்ணன் திமுக வார்டு கவுன்சிலராவார். உண்மை இப்படி இருக்க, சிலுவைகள் உடைக்கப்பட்ட உடன், விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்ற இந்து முன்னணி தொண்டர்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று போலீசார் பல மணிநேரம் அடைத்து வைத்துள்ளனர்.
ஓசூர் அருகே உள்ள மதகொண்டபள்ளியில் தேவாலயம் தாக்கப்பட்டதை அடுத்து அந்தோணியப்பா மகன் சின்னப்பன் என்ற கிறிஸ்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். இங்கும் இந்து விரோதிகள் இந்து முன்னணி மீது புகார் கூறி போலீசாருக்கு நிர்பந்தம் கொடுத்துள்ளனர். என்றபோதிலும், முன் விரோதம் காரணமாக சின்னப்பன்தான் தேவாலயத்தை சேதப்படுத்தினார் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கிறிஸ்துவ மதத்தில் ஏராளமான பிரிவுகள் உள்ளன. இவர்கள் இந்துக்களை மத மாற்றம் செய்வதுடன் தங்களுக்குள்ளேயே ஆள் பிடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு தேவாலயத்தை மற்றொரு பிரிவினர் தாக்குகின்றனர். உண்மை இப்படி இருக்க தீர விசாரிக்காமல் இந்து முன்னணி தொண்டர்களை காவல் துறையினர் கைது செய்து வருகின்றனர். விசாரணையில் உண்மை தெரிந்த பின் அவர்களை விட்டு விடுகின்றனர். ஆனால், அதற்காக வருத்தமோ, மன்னிப்போ கேட்பதில்லை.
சிறுபான்மையினரின் ஓட்டுக்களை பெறுவதற்காக பல்வேறு கட்சிகள் தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லை என்று கூறி வருகின்றனர்.
இதுவரை தமிழகத்தில் தேவாலய தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இந்து முன்னணி தொண்டர்களை உடனே விடுதலை செய்து அவர்கள் மீதான பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.
தமிழகத்தின் அமைதிக்கு விரோதமாக தினந்தோறும் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்துவதை கிறிஸ்துவ பாதிரியார்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.