பிரபாகரனுடன் சமரசம் கிடையாது - நிர்வாகத்தில் இடமும் கிடையாது: ராஜபக்ஷே
கொழும்பு: விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுடன் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது. போருக்கு பின்னர் அமையவுள்ள நிர்வாகத்திலும் அவருக்கு எந்த பங்கும் தரப்பட மாட்டாது என்று இலங்கை அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.
தனியார் டிவி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறுகையில், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுடன் எந்தவித சமரசமும் செய்து கொள்ள முடியாது. புலிகளை வீழ்த்திய பிறகு புதிய அரசு அமைக்கப்படும்.
அந்த அரசில் பிரபாகரன் உள்பட யாருக்கும் இடமில்லை. இலங்கை இனப் பிரச்சனைக்கு ராணுவ ரீதியாக தீர்வு காண விரும்பவில்லை. ஆனால், தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க அரசு உறுதி பூண்டுள்ளது.
புலிகளின் அரசியல் தலைமை இடமான கிளிநொச்சியை ராணுவம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. புலிகளுக்கு நாங்கள் தரும் கடைசி வாய்ப்பு இது. புலிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு ராணுவத்திடம் சரண் அடைய வேண்டும்.
இல்லையென்றால் போரை நிறுத்திக் கொள்ள வேண்டும். தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்படும். அதிலும் தீவிரவாதிகளுக்கு இடமிருக்காது என்றார்.