ஸ்பெக்ட்ரம் ஊழல்: கனிமொழிக்கும் தொடர்பு - சொல்கிறார் சுவாமி
சென்னை: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு முறைகேட்டில் திமுக எம்பி கனிமொழி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருக்கிறது. இதுகுறித்து விசாரிக்க மத்திய அரசு சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் இதுகுறித்து அவர் கூறுகையில், மத்திய அரசின் தொலைத் தொடர்பு துறையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு காரணமாக மத்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்றுள்ள ஸ்வான் என்ற நிறுவனம் தொலைத் தொடர்பு துறையில் இல்லாத ஒரு நிறுவனமாகும்.
மும்பையைச் சேர்ந்த இந்த நிறுவனம் ஸ்பெக்ட்ரம் உரிமைகளை வாங்கிய பிறகு பாதி பங்குகளை அபுதாபியில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு விற்றுள்ளது.
இந்த முறைகேட்டில் மத்திய அமைச்சர் ராசா, தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் எம்பி கனிமொழி மற்றும் இரண்டு குடும்ப உறுப்பினர்களுக்கு தொடர்பு உள்ளது. எனவே இதுகுறித்தும் மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
ஸ்வான் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஸ்பெக்ட்ரம் உரிமத்தை பிரதமர் மன்மோகன்சிங் ரத்து செய்ய வேண்டும்.
ராஜீவ் காந்தி கொலையில் முக்கிய குற்றவாளியான விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
அதன் பிறகே மத்திய அரசு இலங்கை பிரச்சனைக்கு தீர்வு காணவும், அமைதி திரும்பவும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவ சபைகளின் சதி:
ஒரிசா மாநிலத்தில் விஸ்வ இந்து பரிஷத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுவாமி லஷ்மணானந்தா கொலை செய்யப்பட்டதில் கத்தோலிக்க கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு தொடர்பு உள்ளது.
கடந்த மே மாதம் கிறிஸ்தவ மிஷனரி ஒன்றின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்ட நிர்வாகிகள் சபைகளின் மதமாற்ற நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்கும் லஷ்மணானந்தாவுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஒரிசாவில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து அம்மாநில அரசை கலைக்கவும், பஜ்ரங்தள் அமைப்பை தடை செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டது.
அதற்குள் கிறிஸ்தவ சபைகளின் இந்த தீர்மானம் குறித்து உளவு துறை மூலம் மத்திய அரசுக்கு தகவல்கள் சென்றன. இதையடுத்தே அந்த திட்டம் கைவிடப்பட்டது.
எனவே லஷ்மணானந்தா கொலையில் கிறிஸ்தவ சபைகளுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க சிபிஐக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.
சிதம்பரம் லாயக்கில்லை:
அமெரிக்காவில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் நடவடிக்கைகள் அதே போன்ற நிலையை இந்தியாவிலும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
எனவே அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக இந்தியா தனது சுயத்தை இழந்து விடும் அபாயம் உள்ளது. எனவே இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தக் கூடாது என்றார்.












Click it and Unblock the Notifications