நாங்கள் ஆட்சியேற்றதும் மதுக்கடைகள் மூடப்படும்: அன்புமணி
சென்னை: மதுவை ஒழிக்கும் அதிகாரம் என்னிடம் இருந்திருந்தால் அந்த கோப்பில்தான் முதலில் கையெழுத்திட்டிருப்பேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பூரண மதுவிலக்கு கொண்டு வர முதல் கையெழுத்து போடுவோம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
பசுமைத் தாயகம் சார்பில் மது ஒழிப்புக் கொள்கை கருத்தரங்கம் சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி பேசுகையில், மது ஒரு சமூக பிரச்சனை. சாலை விபத்துக்களில் 40 சதவீதம் குடிபோதையினால் நடக்கிறது.
எல்லா தீமைகளுக்கும் ஆணி வேறாக இருக்கும் மதுவை ஒழிக்க வேண்டும்.
மதுவை தடை செய்யும் அதிகாரம் மாநில அரசுகளிடம்தான் உள்ளது. எனவே பூரண மதுவிலக்கை மாநில அரசுகளே கொண்டு வர வேண்டும்.
காந்தி ஜெயந்தி முதல் நாடு முழுவதும் புகை பிடிக்க தடை சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை செயல்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசுகளிடம் அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல மதுவை ஒழிக்கும் அதிகாரம் என்னிடம் இருந்திருந்தால் அந்த கோப்பில்தான் முதலில் கையெழுத்திட்டிருப்பேன்.
இன்னும் சில ஆண்டுகளில் இங்கே நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பூரண மதுவிலக்கு கொண்டு வர முதல் கையெழுத்து போடுவோம். மதுக்கடைகள் அனைத்தும் மூடப்படும்.
தமிழகத்தில் மருந்துகடைகளை விட மதுக்கடைகள் அதிகமாக இருக்கிறது. மதுவின் மூலம் இளைஞர்கள் அழிவுக்கு போகிறார்கள். மது விற்பனை வருவாய் மூலம் இலவச பொருட்கள் கொடுக்க வேண்டாம். இளைஞர்களுக்கு வேலை கொடுங்கள்.
இன்னும் சில மாதங்களில் மதுவை கட்டுப்படுத்தும் தேசிய கொள்கை வகுக்கப்படும். புகையிலை பொருட்கள் உற்பத்தியை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது என்றார்.