கன்னியாகுமரி அருகே காற்றழுத்த தாழ்வு நிலை
அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை பெய்யும். இந்த மழை அக்டோபர் 20ம் தேதி வாக்கில் தொடங்கும். ஜனவரி மாதம் 5ம் தேதி வரை நீடிக்கும்.
வட கிழக்கு பருவ மழை தொடக்கத்திற்கு அறிகுறியாக தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பல இடங்களில் கன மழையும் பெய்துள்ளது. வறண்ட மாவட்டமான ராமநாதபுரத்தில் நேற்று முன்தினம் 22 செமீ மழை கொட்டி தீர்த்தது.
இந் நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது,
இலங்கை அருகே நிலை கொண்டிருந்த குறைந்த அழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. அது தமிழ்நாட்டில் கன்னியாகுமரி முதல் தென்மேற்கு வங்க கடல் வரை குறைந்த அழுத்த தாழ்வு நிலையாக மாறி மையம் கொண்டுள்ளது.
இதன் காரணமாக இன்று மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக் கூடும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என்றார்.
ராமநாதபுரத்தில் மிக அதிகமாக 22 செ.மீ. மழை பதிவானது. பலத்த மழையின் காரணமாக ஊரணிகள் மற்றும் நீர் நிலைகள் நிரம்பின. சாலைகளில் பெருமளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் பல தனியார் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் 17 செ.மீ. மழையும், தஞ்சை, திருவிடைமருதூர் ஆகிய இடங்களில் தலா 10 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
கும்பக்கோணம், நாகப்பட்டினம், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் தலா 8 செ.மீ. மழையும், கொடவாசல், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, பாடாலூர் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
சிதம்பரம், வலங்கைமான், மயிலாடுதுறை, தரங்கம்பாடி, மணிமுத்தாறு, திருச்செந்தூர், தக்கலை, பெரம்பலூர் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ. மழை பெய்துள்ளது.
பரங்கிப்பேட்டை, காரைக்கால், சேத்தியாதோப்பு, ஒரத்தநாடு, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மணமேல்குடி, அம்பாசமுத்திரம், ராதாபுரம், நாகர்கோவில், நாங்குனேரி, பாளையங்கோட்டை, மணியாச்சி, தாராபுரம் ஆகிய பகுதிகளில் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது.
மதுரை வீடு இடிந்து சிறுவன் சாவு:
மதுரை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மதுரை-அலங்காநல்லூர் செல்லும் பாதையில் ரெங்கராஜபுரம் கிராம பகுதியில் வயல் வெளிகளில் தண்ணீர் புகுந்ததில் பயிர்கள் மிதக்கின்றன.
இங்குள்ள வயல் பகுதியில் குடியிருப்பவர் விவசாயி சேகர் (35). அவரது மனைவி விஜயா (30), மகள் கார்த்திகா (10), மகன் கார்த்திக் (8) ஆகியோருடன் நேற்று முன் தினம் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது வீட்டின் மேற்கு பகுதி சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 3 பேர்ம் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதில் படுகாயம் அடைந்த கார்த்திக் பரிதாபமாக பலியானான். சேகர், விஜயா படுகாயம் அடைந்தனர். மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மின்னல்-பெண் பலி:
கடலூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று பகல் 12.30 முதல் 2 மணி வரை பலத்த மழை பெய்தது. சிதம்பரம் அருகே உள்ள கண்ணங்குடி பேரூராட்சி பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மின்னல் தாக்கி மயக்கமடைந்தனர். இவர்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
புவனகிரி அருகே நத்தமேடு கிராமத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ராஜேஸ்வரி (29) என்பவர் மீமின்னல் தாக்கி பலியானார்.