விஜய்காந்த் பேரணி: நெரிசலில் விழிபிதுங்கிய சென்னை!
சென்னை: ஒரு சின்ன மழைக்கே கடும் போக்கு வரத்து நெரிசலில் திணறும் மோசமான உள்கட்டமைப்பு வசதிகள் கொண்டது சென்னை நகரம்.இதில் அவ்வப்போது மாநாடு, பேரணிகள் என்று அரசியல்வாதிகள் விளையாடுவார்கள். நேற்று விஜய்காந்தின் முறை.
பிற்பகல் அவர் கட்சியின் மாநாடு துவங்குவதற்கு முன் ஆரம்பித்த போக்குவரத்து நெரிசல் நள்ளிரவு தாண்டியும் நீடித்தது.
வார இறுதி, தீபாவளி சீசன், கூடவே இந்த மாநாட்டு கலாட்டக்களும் சேர்ந்து கொண்டதால் கிண்டியிலிருந்து, தி.நகர், பீச், அண்ணா சாலைக்கு சென்ற பலரும் கடும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டு முன்னேறவும் முடியாமல் பின்செல்லவும் வழியில்லாமல் தவித்தனர்.
பேருந்துகளில் சென்றோர் சாதாரண தூரத்தைக் கடக்கவே பல மணி நேரம் ஆனது. வாகனங்களைத் திருப்பிவிட வழியின்றி போக்குவரத்து போலீசார் மிகவும் திணறிப் போனார்கள்.
கடற்கரை காமராஜர் ரோடு, அண்ணாசாலை போன்ற முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. பொதுமக்கள் பலர் அதிருப்தியுடன் திட்டியபடி வாகனங்களில் பல மணி நேரம் ஊர்ந்து சென்றனர்.
4 மணி நேரம் பார்வையிட்டார் விஜய்காந்த்!
இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற தே.மு.தி.க. பேரணியை விஜயகாந்த் 4 மணி நேரம் பார்வையிட்டார்.
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே பிற்பகல் 2.30 மணியளவில் இளைஞர் அணியின் பேரணி தொடங்கியது.
தொடங்கி வைத்தார். அந்தக் கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர். பேரணியில் தாரை தப்பட்ட முழங்க குதிரையாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் ஆகியவை இடம் பெற்றன.
இந்த பேரணி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையிலிருந்து புறப்பட்டு கலைவாணர் அரங்கம் வழியாக அண்ணாசாலைக்கு வந்தது. அங்கிருந்து மன்றோ சிலை நோக்கி பேரணி தொடர்ந்தது. மன்றோ சிலை அருகே பேரணியை விஜயகாந்த் பார்வையிடுவதற்காக சிறப்பு மேடை அமைக்கப்பட்டிருந்தது.
விஜய்காந்த் விமானப்படை!
இளைஞர்கள் பலர் குதிரையின் மேல் கட்சி கொடியை பிடித்தபடி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
ஊர்வலத்தில் விஜயகாந்த் விமானப்படை, விஜயகாந்த் கப்பல்படை என்ற பெயர்களில் வாகனங்களை விமானம் போலவும், கப்பல் போலவும் வடிவம் அமைத்து கொண்டு சென்றனர். ராணுவ டாங்கி போலவும் வாகனங்களை வடிவமைத்து தொண்டர்கள் கொண்டு சென்றனர்.
பிற்பகல் 3.40 மணிக்கு மேடையில் ஏறி இரவு 7.45 மணி வரை சுமார் 4 மணி நேரம் நின்றபடி பேரணியைப் பார்த்தார் விஜய்காந்த். அந்த 4 மணிநேரமும் செனையின் இதயமான அண்ணா சாலையில் போக்குவரத்து கிடையாது!