அமளி-மக்களவை ஒத்திவைப்பு
டெல்லி: ஒரிஸ்ஸா கலவரம், அஸ்ஸாமில் போடோ மலைப் பகுதியில் நடந்து வரும் மோதல் தொடர்பாக சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதையடுத்து மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. இரண்டு நாட்களுக்கு பிறகு இன்று காலை மீண்டும் மக்களவை கூடியது.
டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பாக போலீஸார் நடத்திய என்கவுன்டர் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி பகுஜன் சபாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
சுயேச்சை எம்பி சன்சுமா குங்கூர் ப்விஸ்வ்முத்தியாரி அஸ்ஸாம் மாநிலம் போடோ பகுதியில் நடந்த மோதல் குறித்து கேள்வி எழுப்பி சபை நடுவே வந்து அமளியில் ஈடுபட்டார். இதையடுத்து சபை 12 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் மீண்டும் சபை கூடியபோது பல்வேறு பிரச்சனைகள் குறித்து எதிர்கட்சிகள் கூச்சலிட்டனர். சன்சுமா உள்பட அனைத்து உறுப்பினர்களையும் அமைதியாக இருக்கும்படி சபாநாயகர் சோம்நாத் சோட்டர்ஜி பல முறை கூறினார்.
சட்டர்ஜி கடுமையாக கண்டித்ததை அடுத்து சபை அமைதியானது. பல்வேறு துறை சார்ந்த மசோதாக்களை அமைச்சர்கள் தாக்கல் செய்ய இருந்தனர்.
பின்னர், சன்சுமாவை பேசும்படி சட்டர்ஜி கூறினார். அப்போது சன்சுமா, போடா மலைவாழ் மக்களுக்கும், அடிப்படைவாதிகளுக்கும் இடையே நிலவும் பகை குறித்து விவரித்தார். மேலும் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் நடத்திய தாக்குதலில் மலைவாழ் மக்கள் உயிரிழப்பையும் பல சேதங்களையும் அனுபவித்துள்ளனர் என்றார்.
இதையடுத்து அடுத்த உறுப்பினரை பேச சபாநாயகர் அழைத்தார். ஆனால் சன்சுமா தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்.
பின்னர் சபையின் மையப்பகுதிக்கு வந்த அவர் தனது மேலங்கியையும், காலணியையும் கையில் வைத்துக் கொண்டு தரையில் அமர்ந்து கூச்சிலிட்டார்.
சஸ்பெண்ட் செய்து விடுவேன் என்று சோம்நாத் அவரை எச்சரித்தார். ஆனால் அதை சன்சுமா கண்டுகொள்ளாமல் தொடர்ந்து கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்.
இதையடுத்து சபையை மாலை 4 மணிக்கு ஒத்திவைத்தார் சோம்நாத்.