அசைக்க முடியாத இடத்தில் தேமுதிக: விஜயகாந்த்
சென்னை: தேமுதிக இளைஞரணி மாநாடு தமிழக அரசியலில் திருப்பு முனையாக அமைந்துள்ளது. இதன்மூலம் அகில இந்திய அரசியலில் அசைக்க முடியாத இடத்தை தேமுதிக பெற்றுள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னையில் நடைபெற்ற தேமுதிக இளைஞரணி மாநாடு தமிழக அரசியலில் திருப்பு முனையாக அமைந்துள்ளது. இதன்மூலம் அகில இந்திய அரசியலில் அசைக்க முடியாத இடத்தை தேமுதிக பெற்றுள்ளது.
மாநாட்டுக்கு வந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிட முடியவில்லை. இந்த பெருமை எல்லாம் இயக்கத்திற்கும் எனக்கும் தேடி தந்த உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது வாழ்க்கை முழுவதும் கடமைப்பட்டுள்ளேன்.
மாநாட்டுக்கு வந்த கட்சித் தொண்டர்கள் 8 பேர் விபத்துக்குள்ளாகி இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர்களை இழந்து துடிக்கும் அந்த குடும்பத்தினருக்கு சமாதானம் சொல்ல முடியாமல் கனத்த இதயத்தோடு உள்ளேன். அவர்களது குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை ஆண்ட கட்சியும் ஆளுகின்ற கட்சியும் மக்களின் வரிப்பணத்தில் ஊழல் செய்து சேர்த்து வைத்துக் கொண்டு தமிழகத்தில் ஜனநாயகத்தை அழித்து வருகின்றன.
ரூ.5 கோடி தேர்தல் நிதி:
இந்த பணநாயகத்தை எதிர்த்து ஜனநாயகத்தை தமிழகத்தில் வேரூன்றச் செய்வதை நம் தலையாய பணியாகும். கட்சியின் தேர்தல் நிதிக்காக முதல் தவணையாக தொண்டர்களால் ரூ.5.12 கோடி வழங்கப்பட்டுள்ளது
மாநாட்டுக்கு ஒத்துழைப்பு அளித்த இந்திய ராணுவம் முதல் மாநில அரசுத் துறைகளுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொறுப்புணர்ந்து பொதுப் பணியாற்றினால் மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்து மேலும் மேலும் பொறுப்புகள் தருவார்கள். அத்தகைய தகுதியை வளர்த்துக் கொள்வதே இந்த மாநாடு நமக்கு கற்று தரும் பாடமாகும் என்பதை மறந்து விடக்கூடாது.
அரசியலில் உழைக்க வந்திருக்கிறோமே தவிர பிழைக்க வரவில்லை. அத்தகைய உழைப்புக்கு இந்த மாநாடு ஒரு ஊக்க மருந்தாகும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications