டீன்-ஏஜில் வாழ்க்கை கல்வி அவசியம்: கீதாஜீவன்
சென்னை: டீன்-ஏஜ் வயதில் வாழ்க்கை கல்வி அவசியமானது. ஆசிரியர்கள் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.
மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் வளர் இளம்பருவ மாணவிகளின் உடல் ஆரோக்கியத்தை பேணும் வகையில் மாதந்தோறும் இலவச நாப்கின் வழங்கப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.
அதன்படி, முதற்கட்டமாக 9 மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 16,710 மாணவிகளுக்கு நாப்கின் வழங்கப்படுகிறது. சுமார் ரூ.18 லட்சம் செலவில் 8 மாதங்களுக்கு பெல்லா நிறுவனம் நாப்கின்களை தயாரித்து வழங்குகிறது.
மாணவிகளுக்கு நாப்கின்கள் வழங்கும் திட்டத்தை பெரம்பூர் மாநகராட்சி பள்ளியில் அமைச்சர் கீதாஜீவன் இன்று தொடங்கி வைத்தார். பெல்லா நிறுவன இயக்குனர் ராஜேந்திரமணி கலந்து கொண்டார்.
அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:
இந்தியாவில் முதல் முதலாக சென்னை மாநகராட்சியில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. எந்த திட்டத்தையும் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டும் வகையில் முதல்வர் செய்து வருகிறார்.
டீன்-ஏஜ் என்பது புரியாத வயது. இந்த தருணத்தில் வாழ்க்கை கல்வி அவசியமானது. தமிழ்நாடு முழுவதும் சமூக நலத் துறை மூலம் 3 லட்சம் வளர் இளம் பெண்களுக்கு வாழ்க்கை கல்வி பயிற்சி அளித்து வருகிறோம்.
மாணவிகள் வயதுக்கு வந்த பருவத்தில் இருந்தே நாப்கின் பயன்படுத்துவதன் மூலம் பிற்காலத்தில் பல்வேறு நோய்கள் தாக்காமல் பாதுகாத்து கொள்ளலாம்.
பெற்றோர், ஆசிரியர்கள் வழிகாட்டுதலின்படி மாணவிகள் நடந்தால் வாழ்க்கை தடம் மாறாமல் அமையும். ஆசிரியர்களும் பாடங்களை மட்டுமே போதிக்காமல் விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்த வேண்டும் என்றார்.
மாதந்தோறும் 5ம் தேதி ஆசிரியைகள் மூலம் மாணவிகளுக்கு நாப்கின்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications