தற்கொலை மிரட்டல்: காணாமல் போன மாணவி் கதி?
சென்னை: தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறிவிட்டு காணாமல் போன மாணவியை போலீஸார் தேடி வருகின்றனர். அவரது செல்போன் மற்றும் ஹேன்ட் பேக் கடற்கரையில் கிடைத்ததை அடுத்து அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.
ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் மோகன்பிரபு. இவரது மகள் சுவாதி (21). சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் இன்ஜினீயரிங் கல்லுரியில் எம்எஸ்சி 2ம் ஆண்டு படித்து வருகிறார்.
கல்லுரி விடுதியில் தங்கி படித்து வரும் சுவாதி கடந்த சில நாட்களாக சோகமாக காணப்பட்டார். தற்போது படிக்கும் பாடப்பிரிவு கடினமாக இருப்பதாகவும், வேறு பிரிவில் சேர்த்து விடும்படியும் பெற்றோரிடம் கூறி உள்ளார். ஆனால் பெற்றோர் அவரை கட்டாயபடுத்தி படிக்க வைத்ததாகத் தெரிகிறது.
இந் நிலையில் நேற்று திடீரென்று சுவாதி காணாமல் போனார். அவரது அறையில் கண்டெடுக்கப்பட்ட கடிதத்தில் ஷாப்பிங் செல்வதாக எழுதி இருந்தார்.
பின்னர், தனது தோழிக்கு போன் செய்த சுவாதி, நான் நீலாங்கரையில் உள்ள சாய்பாபா கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு தற்கொலை செய்துக் கொள்ளப் போகிறேன். எனக்கு வாழப் பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த தோழி போலீஸூக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து சுவாதியை தேடினர். அப்போது நீலாங்கரை கடற்கரையில் சுவாதியின் செல்போனும் ஹேண்ட் பேக்கும் கிடந்தது.
அவர் தற்கொலை செய்து கொண்டாரா, வேறு எங்கும் சென்றுவிட்டாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.