சிங்கப்பூரில் வேலை: 35 நர்ஸ்களிடம் ரூ.20 லட்சம் மோசடி
சென்னை: சிங்கப்பூரில் நர்ஸ் வேலை வாங்கித் தருவதாக கூறி 35 பேரிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்துள்ள நிறுவனத்தினர் மீது புகார் எழுந்துள்ளது.
நெல்லையை சேர்ந்தவர் உமாதேவி (25) நர்சிங் பட்டதாரி. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
சிங்கப்பூரில் நர்ஸ் பணியிடங்கள் அதிகளவில் காலியாக இருக்கிறது. ரூ.50,000 கட்டினால் பாஸ்போர்ட் மற்றும் விசாவுடன் வேலை வாங்கி தருவதாக இண்டர்நெட்டில் விளம்பரம் பார்த்தேன்.
அந்த விளம்பரத்தில் கொடுத்திருந்த சென்னை அமைந்தக்கரையில் உள்ள பவர் லைன் கன்ஸ்டிரக்ஷன் என்ற நிறுவனத்துக்கு விண்ணப்பித்தேன். என்னை போல பலரும் விண்ணிப்பித்திருந்தனர்.
அதன் உரிமையாளர்கள் உசேன் அலி, முகமதுசலீம் இருவரும் எங்களிடம் நேர்முகத் தேர்வு நடத்தினார்கள். முதற் கட்டமாக ரூ.25,000 பெற்றுக்கொண்டனர்.
வேலை தயாரானதும் மீதி தொகையை பெற்றுக் கொள்வதாக கூறினார்கள். அதன்படி சில தினங்களுக்கு முன்பு மீதி ரூ.25,000யும் வாங்கி கொண்டனர். 20ம் தேதி விமான டிக்கெட்டை பெற்றுக் கொள்ளும்படி கூறினர்.
என்னை போல விண்ணப்பித்திருந்த 35 பேர் நேற்று மாலையே சென்னை வந்துவிட்டோம். அமைந்தகரைக்கு சென்று பார்த்தபோது சம்பந்தப்பட்ட நிறுவவனம் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தோம். அந்த நிறுவனம் எங்களை மோசடி செய்தது தெரியவந்தது.
சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நாங்கள் இழந்த பணத்தை மீட்டுத்தரும்படி கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.
இந்த மோசடி நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட 35 பேரும் இன்று கமிஷனர் அலுவலகத்தில் குவிந்தனர். இவர்களிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.