மழை தீவிரம்-வைகை ஆற்றில் வெள்ள அபாயம்
தேனி: தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிப்பதால் தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது.
தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 576 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற் பட்டது.
மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக திகழும் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
கடந்த 2 நாட்களில் மட்டும் அணை நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 53 அடியாக இருந்த வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 60.30 அடியாக இருந்தது. தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளது.
மாவட்ட முழுவதும் நல்லமழை பெய்து வருவதால் வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
இன்று மாலைக்குள் நீர்மட்டம் 66 அடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 66 அடியை எட்டினால் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும்.
இதனால் 5 மாவட்ட கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை:
காஞ்சிபுரம், கோவை மாவட்டங்களில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை கொட்டியது. இன்று காலையிலும் மழை நீடித்தது. அதனால் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) நம்பிராஜன் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளித்து உத்தரவிட்டார்.
கோவை மாவட்டத்தில் இரவு முழுவதும் கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. கோவை நகரில் விடிய விடிய தொடர்ந்து பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது.
காலையிலும் மழை விடாமல் பெய்ததால் கலெக்டர் பழனிகுமார் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டார்.
நேற்று தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications