இலங்கை தூதரகத்திற்குள் புகுந்த 17 மாணவர்கள் கைதாகி விடுதலை
சென்னை: போலீஸ் காவலை மீறி சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்குள் புகுந்த 17 சட்டக் கல்லூரி மாணவர்களை போலீஸார் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்துள்ளன. பல்வேறு அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள், மாணவர் அமைப்புகள் உள்ளிட்டவை பல்வேறு போராட்டத்தை நடத்தி வருகின்றன.
இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இலங்கை அரசின் தூதரக அலுவலகம் உள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது தடை செய்யப்பட்ட பகுதி ஆகும். அங்கு பாதுகாப்புக்காக 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். போலீஸ் பூத் ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை, சட்டக்கல்லூரி மாணவர்கள் 17 பேர் திடீரென்று இலங்கை தூதரக அலுவலகம் முன்பு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக கூறினார்கள். அது தடை செய்யப்பட்ட பகுதி என்பதால் போலீசார் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினார்கள்.
இந்த நிலையில், சில மாணவர்கள் போலீஸ் கட்டுக்காவலை மீறி சுவர் ஏறி இலங்கை தூதரக அலுவலகத்துக்குள் குதித்து விட்டனர். உடனே, அங்கு காவலுக்கு இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்ற மாணவர்களை விரட்டி அடித்தார்கள்.
வெளியே போகாவிட்டால் துப்பாக்கியால் சுட்டுவிடுவோம் என்றும் எச்சரித்தார்கள். அதன்பிறகு, உள்ளே சென்ற மாணவர்கள், வெளியே வந்தனர்.
இந்த போராட்டத்தில் இலங்கை தூதரக அலுவலகம் உள்ளே இருந்த நோட்டீஸ் போர்டு அடித்து நொறுக்கப்பட்டது. போலீஸ் பூத்தின் கண்ணாடி ஜன்னல்களும் உடைக்கப்பட்டன. இது பற்றி தகவல் கிடைத்தவுடன் துணை கமிஷனர் மவுரியா, உதவி கமிஷனர் ரவீந்திரன் ஆகியோர் போலீஸ் படையுன் விரைந்து சென்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததாக அவர்கள் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பின்னர் இரவில் கைதான மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து துணைத் தூதரகத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.