மறந்த பட்டு சேலை..பறந்து வந்த பெண்!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் மறந்து போய் விட்டு விட்டுச் சென்ற பத்து பட்டுச் சேலைகளை மும்பையிலிருந்து மீண்டும் விமானத்தில் பறந்து வந்து எடுத்துச் சென்றார் மும்பைப் பெண் ஷியாமா.
மும்பையைச் ேசர்ந்தவர் ஷியாமா. இவர் தீபாவளிக்காக பட்டுச் சேலைகள் வாங்க சென்னை வந்தார். பத்து பட்டுச் சேலைகளையும் பர்ச்சேஸ் செய்தார்.
பின்னர் மாலையில் விமானம் மூலம் மும்பை திரும்பினார். மும்பை சென்ற பின்னர்தான் பட்டுச் சேலைகள் இருந்த சூட்கேஸை சென்னை விமான நிலையத்திலேயே மறதியாக விட்டு வந்தது தெரிய வந்தது.
இந்த நிலையில் இரவில் கேட்பாரற்றுக் கிடந்த பட்டுச் சேலை இருந்த சூட்கேஸைப் பார்த்த சென்னை விமான நிலைய அதிகாரிகள் பரபரப்படைந்தனர். அதில் வெடிகுண்டு இருக்கலாம் என அச்சம் வந்தது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்தனர்.
ஆனால் குண்டு இல்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து சூட்கேஸைத் திறந்து பார்த்தபோது அதில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பட்டுச் சேலைகள் இருந்ததைப் பார்த்து நிம்மதியடைந்தனர். பின்னர் யார் இதை விட்டுச் சென்று என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், பட்டுச் சேலை சூட்கேஸை விட்டு விட்டு வந்த ஷியாமா, பத்து லட்சமாச்சே என்ற பரிதவிப்புடன் அடுத்த விமானத்தைப் பிடித்து சென்னைக்குப் பறந்து வந்தார்.
அதிகாரிகளை அணுகி பட்டுச் சேலை சூட்கேஸ் தன்னுடையது என்று கூறி அதற்கான ஆதாரங்களைக் காட்டி திரும்பப் பெற்றார். பின்னர் மீண்டும் மும்பைக்குப் பறந்து சென்றார்.