அஸ்ஸாம் குண்டுவெடிப்பு: இந்தியன் முஜாஹிதீன்- ஐஎஸ்எப் பொறுப்பேற்பு

அஸ்ஸாமில் நடந்த குண்டுவெடிப்பில் 77 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு உல்பா தீவிரவாதிகள் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
இந்த நிலையில் இஸ்லாமிய பாதுகாப்புப் படை- இந்தியன் முஜாஹிதீன் என்ற தீவிரவாத அமைப்பு குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்றுள்ளது.
இதுகுறித்து அஸ்ஸாமைச் சேர்ந்த நியூஸ் லைவ் என்ற டிவிக்கு அது அனுப்பியுள்ள எஸ்.எம்.எஸ் செய்தியில், அஸ்ஸாம் குண்டுவெடிப்புக்கு நாங்களே காரணம். இதேபோன்ற தாக்குதல்களை நாடு முழுவதும் நடத்துவோம்.
இந்த தாக்குதலை வெற்றிகரமாக நடத்துவதற்கு உதவியாக இருந்த புனித உறுப்பினர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
9864693690 என்ற ரிலையன்ஸ் எண்ணிலிருந்து இந்த எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ். வந்த பின்னர் அந்த செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு விட்டது.
மத்திய அஸ்ஸாமின், நாகோன் மாவட்டம், மோய்ராபாரி என்ற இடத்திலிருந்து இந்த எஸ்.எம்.எஸ். வந்துள்ளது. நஸீர் அகமது என்பவர் பெயரில் இந்த செல்போன் எண் உள்ளது தெரிய வந்துள்ளது.
2000மாவது ஆண்டு போடோ ஆதிக்கம் உள்ள கீழ் அஸ்ஸாமில் இந்த தீவிரவாத அமைப்பு தொடங்கப்பட்டது. போடோ விடுதலைப் புலிகள் என்ற தீவிரவாத அமைப்பை சமாளிக்க இந்த தீவிரவாத அமைப்பு தொடங்கப்பட்டது என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதமர்-சோனியா பயணம்:
இந் நிலையில் அஸ்ஸாம் மாநிலத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இன்று செல்கின்றனர். கெளஹாத்தி செல்லும் அவர் குண்டுவெடிப்பில் பலியானவர்களின் குடும்பத்தினரையும் காயமடைந்தவர்களையும் சந்திக்கின்றனர்.












Click it and Unblock the Notifications