தங்கம்: ஒரேநாளில் பவுனுக்கு ரூ.328 வீழ்ச்சி!
சென்னை: தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.328 குறைந்துவிட்டது.
இன்று காலை நிலவரப்படி பவுன் ரூ.8 ஆயிரத்து 864-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.1,149 என்ற விலையில், பவுன் ரூ.9 ஆயிரத்து 192-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.1,108 என்ற விலைக்கு வந்துவிட்டது. அதாவது ஒரே நாளில் பவுனுக்கு ரூ.328 குறைந்தது.
இதுகுறித்து தமிழ்நாடு நகை வியாபாரிகள் கூட்டமைப்பு ஆலோசகர் எல்.கே.எஸ்.சையதுஅகமது கூறியிருப்பதாவது:
தங்கம் ஒரு பவுன் ரூ.10 ஆயிரம் என்று விற்பனையாகிய நிலைமாறி, தற்போது ரூ.9 ஆயிரத்திற்குள் வந்திருக்கிறது. அதற்கு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் பொருளாதார நிலைமை சீர்குலைந்திருப்பதுதான் காரணம். அதனால் அந்த நாட்டு மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதைக் குறைத்துள்ளனர். தங்கத்தை குறைந்த விலையில் வாங்கி கையிருப்பு வைத்திருப்பவர்களும், தற்போது அதை விற்பனை செய்து வருகிறார்கள்.
அதேநேரம் சர்வதேச சந்தையில் தங்கத்தின் வரவு அதிகமாக இருப்பதால் தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதேபோல கச்சா எண்ணெய் விலையும் பாதி குறைந்துள்ளது. ஒரு பேரல் 140 டாலர் என்ற இருந்த பேரல் விலை தற்போது மிகவும் குறைந்துள்ளது. ஆன்லைன் வியாபாரம் அடியோடு குறைந்துவிட்டது. இதன் காரணமாகவே தங்கம் விலை இறங்குமுகமாக உள்ளது. மேலும் விலை குறையும் என்று வியாபாரிகள் எதிர்பார்க்கிறார்கள். இந்த நேரம் தங்கம் வாங்க ஏற்ற நேரம் என்றார்.












Click it and Unblock the Notifications