விமான நிறுவனங்களின் இழப்பை சரிகட்ட சுங்கவரி ரத்து!
டெல்லி: விமான நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்டும் விதத்தில் விமான எரிபொருள் மீதான 5 சதவீத சுங்க வரியை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்துள்ளது.
மேலும் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் விமான எரிபொருள் விலையை 16.8 சதவீத அளவிற்கு குறைத்துக் கொள்ள முன் வந்துள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருவதையடுத்து, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் புதுடெல்லியில் ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் விலையில் ரூ.9,429.87 குறைத்து, ரூ.47,017.93 ஆக ஆக்கியுள்ளன.
தற்போது சுங்க வரி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதையடுத்து, விமான எரிபொருள் விலை ஒரு கிலோ லிட்டருக்கு மேலும் ரூ.1,800 முதல் 2,000 வரை குறைய வாய்ப்புள்ளது.
இந்தியாவில், விமானச் சேவையில் ஈடுபட்டு வரும் பல நிறுவனங்கள் பல்வேறு காரணங்களால் இழப்பைச் சந்தித்து வருகின்றன. விமானப் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கையும் சரிவடைந்து வருகிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு, விமான எரிபொருள்களின் மீதான 5 சதவீத சுங்க வரியை முழுமையாக ரத்து செய்துள்ளது.
விரிவாக்க திட்டம்
உள்நாட்டிற்குள் விமான போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள், ஒரு கிலோ லிட்டர் (1,000 லிட்டர்) விமான எரிபொருளின் விலை ரூ.36,000 ஆக இருக்கும் என திட்டமிட்டு, விரிவாக்கத்தை மேற்கொள்ள முடிவு செய்திருந்தன.
ஆனால், அவர்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருளின் விலை ரூ.57,000 என்ற அளவில் உயர்ந்தது. தற்போது இதன் விலை சுமார் ரூ.10,000 வரை குறைத்துள்ளது பெட்ரோலியத்துறை.
மேலும் விமான நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய எரிபொருள்களுக்கான கட்டண பாக்கியை செலுத்தும் காலத்தை 60 நாள்களிலிருந்து 90 நாள்களாக நீட்டித்துள்ளது. மேலும் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை 2009-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஆறு தவணைகளில் செலுத்தும் வகையிலும் வழி வகை செய்துள்ளது.












Click it and Unblock the Notifications