ராஜ் தாக்கரே தலைக்கு ரூ.51 லட்சம்!
லூதியானா: ராஜ் தாக்கரே தலையைக் கொண்டு வருபவர்களுக்கு ரூ.51 லட்சம் பரிசு அறிவித்துள்ளது அகில பாரதீய பூர்வாஞ்சல் விகாஸ் பரிஷத்.
மராட்டியத்தில் வாழும் வடமாநில மக்களுக்கு எதிராக வன்முறையை தூண்டி வருவதாக ராஜ்தாக்கரே மீது புகார் எழுந்து உள்ளது. இந்த நிலையில், பிற மாநிலங்களில் குடியேறி உள்ள இந்தி பேசும் தொழிலாளர்கள் கூட்டமைப்பான அகில பாரதீய பூர்வாஞ்சல் விகாஸ் பரிஷத் என்ற அமைப்பு ஒரு கடுமையான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
காஜியபாத், மும்பை, நொய்டா, லூதியானா போன்ற இடங்களில் இந்த அமைப்புக்கு கிளைகள் உள்ளன. அதில் லூதியானா கிளை சார்பாக, ராஜ் தாக்கரே தலையை கொண்டு வருபவருக்கு ரூ.51 லட்சம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் அகில இந்திய தலைவர் மிஸ்ரா, இந்த தகவலை தெரிவித்தார்.
மேலும், ராஜ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் யாரையாவது பார்த்தால் உயிருடன் எரித்து கொல்ல வேண்டும் என்றும் பீகாரைச் சேர்ந்த ராகுல் ராஜ் போல ஒவ்வொருவரும் உயிர் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்றும் சங்க உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் அந்த அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் வகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ள அந்த அமைப்புக்கு நாடெங்கும் கண்டனங்கள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications