மத்திய அரசு அநீதி இழைக்கவில்லை: வாசன்
அரியலூர்: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு அநீதி இழைத்து விட்டதாக குற்றம் சாட்டுவது சரியல்ல. போதிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளதாக மத்திய புள்ளியல் துறை இணை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
அரியலூர் அருகே இளாக்குறிச்சியில், மூப்பனார் சிலைக்கு அடிக்கல் நாட்டும் விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட ஜி.கே.வாசன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது தற்போது நடந்து வரும் தாக்குதலை மத்திய அரசு முழுமையாக எதிர்க்கிறது.
விரிவான பேச்சுவார்த்தையே பிரச்சினையைத் தீர்க்க ஒரே வழி என்பதில் மத்திய அரசு உறுதியான நம்பிக்கையைக் கொண்டுள்ளது.
இப்பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தேவையான நிவாரண உதவிகளை வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. மூலமாக இந்த உதவிகளை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆனால் சில தமிழக கட்சிகள், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசை குற்றம் சாட்டி வருகின்றனர். அவர்கள் உதட்டளவில் தான் இந்தப் பிரச்சினையை அணுகுகின்றனர். மனதளவில் அணுகவில்லை.
வெவ்வேறு விதமாக பேசி இந்தப் பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்ய வேண்டாம் என அரசியல் கட்சித் தலைவர்களை கேட்டுக் கொள்கிறேன் என்றார் வாசன்.












Click it and Unblock the Notifications