கத்தாரில் பிரதமர் மன்மோகன் சிங்
தோஹா: தனது ஓமன் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் நேற்று மாலை கத்தார் வந்தார். கத்தார் மன்னர் சேக் ஹமீத் பின் கலீபா அல் தானியுடன் பிரதமர் நீண்ட ஆலோசனை நடத்தினார்.
இரு நாடுகளும் பாதுகாப்பு, கேஸ் சப்ளை தொடர்பாக 3 ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளன.
பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனும், பாதுகாப்புத்துறைச் செயலாளர் விஜய் சிங்கும் அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினர்.
பிரதமருடன் வந்துள்ள பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா, எரிவாயு சப்ளை குறித்த ஒப்பந்தத்துக்கு இறுதி வடிவம் கொடுத்தார்.
இப்போது ஆண்டுதோறும் இந்தியா 7.5 மில்லியன் டன் எரிவாயுவை கத்தாரிடமிருந்து இறக்குமதி செய்கிறது. இதை 10 மில்லியன் டன்னாக உயர்த்த இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்யவுள்ளன.
அதே போல வெளிநாட்டு இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி, அங்கு வசிக்கும் இந்தியர்களின் விவகாரங்கள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். கத்தாரில் 4.2 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
முன்னதாக பிரதமரின் ஓமன் பயணம் பெரும் வெற்றி பெற்றதாக வெளியுறவுத்துறை கூறியுள்ளது. இரு நாடுகளும் இணைந்து கூட்டு நிதியத்தை உருவாக்கியிருப்பது மிகப் பெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது.
இது தொடர்பாகவும் மேலும் பல விவகாரங்கள் தொடர்பாகவும் ஓமன் மன்னர் கபூஸ் பின் சைத் அல் சைதுடன் பிரதமர் 4 மணி நேரம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
ஓமனில் 5 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஓமன், கத்தாரை உள்ளடக்கிய வளைகுடா கூட்டுறவு கவுன்சில் நாடுகளுடன் (6 நாடுகள்) இந்தியா வரியற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என ஓமன் நாட்டு மன்னர் பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதை பிரதமர் ஏற்றுக் கொள்ள முன் வந்துள்ளார்.
இன்று மாலை பிரதமர் நாடு திரும்புகிறார். கத்தார் சென்ற முதல் இந்தியப் பிரதமர் சிங் தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications