சட்டக் கல்லூரி வன்முறை: சட்டசபையில் அதிமுக, மதிமுக வெளிநடப்பு

சட்டசபை இன்று காலை கூடியதும், சட்டக் கல்லூரி வன்முறை குறித்து அதிமுக, மதிமுக, பாமக உறுப்பினர்கள் பேச முயன்றனர்.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து, சட்டக் கல்லூரி மாணவர்கள் கலவரம் குறித்து கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஆனால் அதற்கு சபாநாயகர் ஆவுடையப்பன் அனுமதி மறுத்தார். கேள்வி நேரம் முடிந்த பின்னர் இதுகுறித்து விவாதிக்க நேரம் தருவதாக அவர் கூறினார்.
மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, இது முக்கிய பிரச்சனைதான். ஆயினும் கேள்வி நேரம் முடிந்ததும் ஏற்கனவே நேற்று எடுப்பதாக இருந்த மின்வெட்டு பிரச்சனை குறித்து விவாதித்து விட்டு அதன் பிறகு சட்டக் கல்லூரி மாணவர்கள் கலவர பிரச்சனையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
ஆனால் அதை ஏற்க மறுத்து அதிமுக உறுப்பினர்கள் கோஷமிட்டனர். அப்போது குறுக்கிட்ட பொதுப்பணித்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. இது பற்றி கேள்வி நேரம் முடிந்ததும் விவாதிக்கலாம்.
பாதிக்கப்பட்ட மாணவர்களை நான் மருத்துவமனையில் நேரில் பார்த்து விட்டு வந்திருக்கிறேன். இதே போல அதிமுக தரப்பில் ஜெயக்குமாரும் வந்து பார்த்து விட்டு வந்துள்ளார். எனவே கேள்வி நேரம் முடிந்ததும் இந்த பிரச்சனை குறித்து விவாதம் செய்யலாம் என்று கூறினார்.
இதனையடுத்து கேள்வி நேர அலுவல்கள் தொடங்கின.
ஆனால் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்களும் அவர்களை தொடர்ந்து மதிமுக உறுப்பினர்களும் சட்டமன்றத்தில் இன்று வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் சில நிமிடங்களில் மீண்டும் அவர்கள் அவை நடவடிக்கைகளில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications