ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி ராஜினாமா-பகுஜனில் சேர திட்டம்
சென்னை: மூத்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவகாமி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். அவர் பகுஜன் சமாஜ் கட்சியில் சேரப் போவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிவகாமி பதில் ஏதும் சொல்லவில்லை. ஆனால் அவர் அரசியலுக்கு வருவது உறுதி எனக் கூறப்படுகிறது.
தமிழகத்தின் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் ஒருவர் சிவகாமி. நேர்மையானவர், யாருக்கும் வளைந்து கொடுக்காதவர் என்ற பெயரெடுத்தவர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவராக அவர் பணியாற்றியு்ள்ளார். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பொறுப்பாக பணியாற்றியவர்.
சிறந்த எழுத்தாளராகவும் திகழ்பவர். தலித் இலக்கியம் தமிழகத்தில் பிரபலமானதில் சிவகாமிக்கும் முக்கியப் பங்கு உண்டு. தலித் பெண்களின் மேம்பாட்டுக்காக குரல் கொடுத்து வருபவர்.
எந்தக் கட்சிக்கும் வளைந்து போகாதவர் என்பதால், எந்த ஆட்சியிலும் இவருக்கு முக்கியப் பதவிகள் கிடைத்ததில்லை. இந்த வருத்தம் சிவகாமியிடம் நீண்ட நாட்களாகவே இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் சிவகாமி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதுவரை அவரது ராஜினாமா கடிதம் ஏற்கப்படவில்லை என்று தெரிகிறது.
ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதும் சிவகாமி, பகுஜன் சமாஜ் கட்சியி்ல் இணைந்து தலித் பெண்களின் முன்னேற்றத்திற்காக தீவிரமாக பாடுபடப் போவதாக கூறப்படுகிறது. மாயாவதியையும் அவர் சந்திக்கவுள்ளாராம்.
ராஜினாமா குறித்து சிவகாமி கூறுகையில், ராஜினாமா கடிதம் வழங்கியுள்ளேன். அது ஏற்கப்பட்டால்தான் அடுத்து நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை தெரிவிக்க முடியும் என்றார்.
பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் அரசியலுக்கு வருவது புதிதல்ல. ஏற்கனவே சந்திரலேகா, ஜனதாக் கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார். அதேபோல சிவகாமியும் தமிழக அரசியல் அரங்கை அலங்கரிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியை உ.பியையும் தாண்டி பலப்படுத்தும் முயற்சியில் உ.பி. முதல்வர் மாயாவதி தீவிரமாக உள்ளார். தமிழகத்தில் சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு முக்கியத் தலைவர் ஒருவர் கிடைத்தார். அவர் செல்வம் என்கிற செல்வப் பெருந்தகை.
இந்த நிலையில் சிவகாமியும் பகுஜன் சமாஜ் கட்சியி்ல் இணைந்தால் அக்கட்சிக்கு மேலும் பலம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.