கோவிந்தாச்சார்யாவிடம் கட்சியை ஒப்படைக்கும் உமா பாரதி

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தீவிர தொண்டரான கோவிந்தாச்சாரியா, பாஜக பொதுச் செயலாளராகவும் இருந்தார். ஆனால், மறைந்த பிரமோத் மகாஜனுடன் ஏற்பட்ட மோதலையடுத்து கட்சியில் ஒதுக்கப்பட்டார். இதையடுத்து 2000ம் ஆண்டில் கட்சியை விட்டு வெளியேறினார்.
பின்னர் ராஷ்ட்ரீய ஸ்வபிமான் ஆந்தோலன் (RSA) என்ற அமைப்பை நிறுவி நடத்தி வருகிறார். உமா பாரதி இவரது தீவிர சிஷ்யை ஆவார்.
முன்னாள் மத்தியப் பிரதேச பாஜக முதல்வரான உமா பாரதியும் சில ஆண்டுகளுக்கு முன் கட்சியை விட்டு வெளியேறி பாரதீய ஜன் சக்தி கட்சியைத் துவக்கினார். கோவிந்தாச்சாரியாவின் ஆலோசனைப்படியே இவர் கட்சியின் கொள்கைகளை வகுத்தார். அவரது யோசனைபபடியே கட்சியை நடத்தி வருகிறார்.
மத்தியப் பிரதேசத்தில் இம் மாதம் 27ம் தேதி நடக்கவுள்ள சட்டசபைதத் தேர்தலில் காங்கிரஸ், பாஜகவுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் உமா.
இந் நிலையில் இன்று போபாலில் நிருபர்களிடம் பேசிய உமா பாரதி,
மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் முடிந்த பின் கட்சியை ஒட்டுமொத்தமாக கோவிந்தாச்சாரியாவிடம் ஒப்படைக்கப் பேகிறேன். அவர் தனது ஆர்எஸ்ஏ அமைப்பின் அரசியல் பிரிவாக கட்சியை நடத்துவார். 2021ம் ஆண்டு வரை அவரே தலைவராகவும் இருப்பார்.
எனது இந்த முடிவுக்கு கோவிந்தாச்சாரியாவின் அனுமதியை கோருகிறேன். ஆர்எஸ்எஸ்சின் அரசியல் பிரிவாக எப்படி பாஜக உருவானதோ அதே போல அதன் இன்னொரு அரசியல் கட்சியாக பாரதீய ஜன் சக்தியும் வளரும். இதை ஆர்எஸ்எஸ் ஏற்றுக் கொண்டாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி.
எனது குருவான கோவிந்தாசார்யாவை நான் தீவிர அரசியலுக்கு வலுக்கட்டாயமாக இழுக்கவில்லை. எதிர்காலத்தை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.
ஆர்எஸ்எஸ் தலைவர் தட்டோபந்த் தெங்டியின் பொருளாதாரக் கொள்கைகள் தான் எனது கட்சியின் பொருளாதாரக் கொள்கைகள்.
எனக்கு இன்னும் கூட உயிருக்கு ஆபத்து இருக்கிறது. 2021ம் ஆண்டில் இந்தியா சூப்பர் பவராக மாறும். ஆனால், அதைப் பார்க்க நான் இருக்க மாட்டேன் என்றே நினைக்கிறேன்.
மத்தியப் பிரதேசத்தில் நான் ஆட்சிக்கு வர வைத்த அதே பாஜக அரசே பாஜகவினரைத் தூண்டிவிட்டு என் மீது தாக்குதல் நடத்தச் செய்திருக்கிறது.
என்னை குண்டு துளைக்காத உடை அணியச் சொல்கிறார்கள். என்னைத் தாக்குதவது நக்ஸல்களோ, தீவிரவாதிகளோ அல்ல, நான் வளர்த்துவிட்ட பாஜகவினர் தான். இதற்கெல்லாம் சேர்த்து வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
மலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாக சாத்வி பிரஞா சிங்கை மகாராஷ்டிர போலீசார் கைது செய்து துன்புறுத்தி வருகின்றனர். இந்த விஷயத்தில் அத்வானி தலையிட்டு பிரதமரிடம் பேச வேண்டும். அவரது கட்சியினர் இந்த விஷயத்தில் சாத்விக்காக உரத்த குரல் கொடுத்தும் கூட அத்வானி மெளனம் சாதிப்பது வருந்தத்தக்கது.
2006ம் ஆண்டு உஜ்ஜயினில் பாரதீய ஜன் சக்தியை ஆரம்பி்க்க முதல் கியர் போட்டேன். இப்போது ஆர்எஸ்ஏவின் அரசியல் பிரிவாக மாறப் போகிறோம். இது செகண்ட் கியர். வரும் மக்களவைத் தேர்தலில் 3வது கியரில் வேகம் பிடித்திருப்போம்.
இந்தத் தேர்தலில் மத்தியப் பிரதேசத்தில் பிரச்சாரம் செய்ய வந்த பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு 100 பேர் கூட எங்கும் கூடவில்லை. அந்தக் கட்சி மண்ணைக் கவ்வும். அதே நேரத்தில் 230 தொகுதிகளில் 207ல் போட்டியிடும் எனது கட்சி பெரும் வெற்றி பெறும் என்றார்.












Click it and Unblock the Notifications