ஆட்டோக்களை வைத்து தகர்ப்போம்: டெல்லிக்கு டெக்கான் முஜாஹிதீன் மிரட்டல்
டெல்லி: டெல்லியில், ஆட்டோக்களைப் பயன்படுத்தி நாச வேலைகளில் ஈடுபடுவோம் என டெக்கான் முஜாஹிதீன் என்ற தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.
மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கும் தாங்களே காரணம் என இந்த அமைப்புதான் முன்பு கூறியிருந்தது. இந்த நிலையில் டெல்லியைக் குறி வைத்திருப்பதாக தற்போது இ மெயில் மூலம் மிரட்டல் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக இந்த அமைப்பு அனுப்பியுள்ள இ மெயிலில், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மற்றும் மூன்று முக்கிய ரெயில் நிலையங்களில் தாக்குதல் நடத்தப்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து டெல்லியில் முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு டெல்லி போலீசாரை உளவுத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
ஆட்டோக்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் டெல்லியில் உள்ள அனைத்து ஆட்டோக்களிலும் தீவர சோதனை நடத்தி வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் தாக்குதல் நடத்தப்பட்ட போதும் கரோல்பாக் பகுதியில் உள்ள கபார் மார்க்கெட்டில் ஆட்டோவில் தான் குண்டு வைக்கப்பட்டது. அப்போது இதுபோன்ற தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத் துறை எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஆட்டோக்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
விமான நிலைய வளாகத்திற்குள் நின்று கொண்டிருக்கும் ஆட்டோக்கள் மற்றும் பயணிகள் இன்றி வளாகத்திற்குள் நுழையும் ஆட்டோக்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.
டெல்லியில் உள்ள ஆட்டோக்கள் அனைத்தும் எரிவாயு மூலம் இயக்கப்படுகின்றன. இதில் குண்டு வைத்தால், பாதிப்பு அதிகம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு உளவுத்துறையிடம் இருந்து தங்களது குறிப்பு வந்துள்ளதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி சஞ்சய் குமார் தெரிவித்தார்.
மேலும் டெல்லியில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அகமதாபாத்துக்கும் மிரட்டல்...
அதே போல குஜராத்தின் அகமதாபாத்த் நகரையும் தீவிரவாதிகள் அடுத்ததாக குறி வைக்கலாம் என மத்திய உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது.