என்எஸ்ஜி கமாண்டோக்கள் புல்லட்டுக்கு யூதர்கள் பலி?
இந்தத் தாக்குதலையடுத்து மும்பை விரைந்த இஸ்ரேலிய தன்னார்வ மீட்புப் படையான ZAKAவின் தலைவர் ஹெய்ம் வெயின்கார்டன் என்பவர் அளித்த தகவலின் அடிப்படையில் ஜெருசலேம் போஸ்ட் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
அவர் கூறுகையில், நரிமன் ஹவுசில் இருந்தவர்களில் சிலர் புதன்கிழமையும், வியாழக்கிழமையும் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதே போல என்எஸ்ஜி கமாண்டோக்களின் தாக்குதல் தொடங்கிய வெள்ளிக்கிழமையும் சிலர் இறந்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை இறந்தவர்கள் தீவிரவாதிகளால் தான் கொல்லப்பட்டிருக்கக் கூடும் என்பதில்லை. அவர்கள் கமாண்டோக்களின் குண்டுகளுக்கோ அல்லது அவர்கள் தீவிரவாதிகளைக் கொல்ல வீசிய கிரனைட் குண்டுகளுக்கோ பலியாகியிருக்கலாம்.
கொல்லப்பட்ட நரிமன் ஹவுசின் இயக்குனரான ரப்பி கெவ்ரியேல் ஹோட்ஸ்பெர்க், குண்டடிபட்ட நிலையிலும் கூட தனது மனைவி ரிவ்காவின் மீது யூத வணக்கத்தின்போது பயன்படுத்தப்படும் துணியை போர்த்திவிட்டு இறந்துள்ளார்.
மேலும் இரு முதியவர்களை போன் வயரால் கட்டிப் போட்டு தீவிரவாதிகள் சுட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.
தீவிரவாதிகளை எதிர்கொள்ள இஸ்ரேல் கமாண்டோக்களை அனுப்ப முன் வந்ததும், அதை இந்தியா ஏற்க மறுத்ததும் குறிப்பிடத்க்கது. இந்திய கமாண்டோக்களின் ஆபரேசனில் ஆரம்பத்தில் இருந்தே இஸ்ரேல் தவறு கண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே பலியான 6 யூதர்களின் உடல்களும் இஸ்ரேலுக்குக் கொண்டு செல்லப்பட்டு இன்று இறுதிச் சடங்குகள் நடந்தன.
இந்த மனிதாபிமானமில்லாத தாக்குதலில் ரப்பி-ரிவிகாவின் 2 வயது மகன் மோசே பெற்றோரை இழந்து அனாதரவாகியுள்ளான். இந்தக் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் அவனை வெளியே கொண்டு போய் சமாதானப்படுத்திவிட்டு வருமாறு அவனை அவனது பாட்டியுடன் தீவிரவாதிகள் வெளியே அனுப்பினர். அப்போது கமாண்டோக்கள் அவர்களை மீட்டது நினைவுகூறத்தக்கது.
இதற்கிடையே தீவிரவாதிகளின் கிரனைட் குண்டுகளாலும் கமாண்டோக்களின் தாக்குதலாலும் நரிமன் ஹவுஸ் கட்டமே சிதிலமாகிவிட்டது. அது எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.













Click it and Unblock the Notifications