பகுஜனில் இணைகிறார் எஸ்வி.சேகர்
சென்னை: நடிகரும் மைலாப்பூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவுமான எஸ்.வி.சேகர் பகுஜன் சமாஜ் கட்சியில் இணையலாம் எனத் தெரிகிறது.
அதிமுகவில் அவர் ஓரம் கட்டப்படுள்ள அவர் மீண்டும் பாஜகவுக்கே திரும்பலாம் என்று கருதப்பட்டது.
இந் நிலையில் தேசிய அளவில் பதவி தருவதாகக் கூறி பகுஜன் சமாஜ் கட்சி அவருடன் பேசி வருகிறது. அவருக்கு கட்சியின் தென் மண்டல பிராமணர் பிரிவின் தலைவர் பதவி தர மாயாவதி தயாராக உள்ளதாகத் தெரிகிறது.
இது குறித்து சேகர் கூறுகையில்,
மாயாவதி கட்சி நிர்வாகிகள் என்னிடம் பேசியது உண்மை. மாயாவதியை நானும் விரைவில் சந்திக்க இருக்கிறேன்.
பகுஜன் சமாஜ் கட்சியில் 25 முதல் 30 சதவீத இடங்கள் பிராமண சமூகத்தினருக்கு வழங்கப்படுகிறது. எனவே அக்கட்சியில் இணைவது பற்றி நான் பரிசீலித்து வருகிறேன்.
சமூகத்தில் பிராமணர்கள் ஒதுக்கப்படுகின்றனர். தலித் மக்கள் அழுத்தப்படுகின்றனர். இரு சமூகத்தினரும் கரம் கோர்க்க வேண்டும்.
பகுஜன் சமாஜ் கட்சியில் சேருவது என்று சமுதாய மக்களுக்கு நன்மை பயப்பதாக அமையும் என்று கருதுகிறேன். பிராமண சமுதாயத்தினரையும், தலித் மக்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடப் போகிறேன். எங்கள் உரிமைகளை பெற இணைந்து போராடுவோம்.
வரும் 6ம் தேதி குரு பெயர்ச்சி வருகிறது. அதன் பிறகு மாற்றங்கள் இருக்கும் என்றார் சேகர்.
பகுஜனில் இணைந்தால் உத்தரப் பிரதேசத்தில் இருந்து அவரை ராஜ்யசபாவுக்கு மாயாவதி அனுப்பலாம் என்று கூறப்படுகிறது.
பகுஜன் சமாஜில் தீரன்:
இந் நிலையில் பாமக முன்னாள் தலைவர் பேராசிரியர் தீரனும் பகுஜன் சமாஜ் கட்டியில் இணைந்துள்ளார். அவருக்கு, மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இக் கட்சியின் இணைந்த சிவகாமி ஐஏஎஸ் முன்னிலையில் அவர் பகுஜன் சமாஜில் இணைந்தார்.
சிவகாமிக்கு கட்சியின் முதன்மைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications