கஸாவ் பாகி்ஸ்தானி அல்ல, யாரையும் ஒப்படைக்க முடியாது, போருக்கு தயார்-சர்தாரி

மேலும் இந்தியா கொடுத்துள்ள பட்டியலில் உள்ள 21 தீவிரவாதிகள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரத்தை இந்தியா தரவில்லை என்றும் இதனால் அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதன்மூலம் இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் திடீரென மிகக் கடுமையான நிலையை எடுத்துள்ளது தெளிவாகியுள்ளது.
மும்பை தாக்குதல் நடந்தவுடன் முதலில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஐஎஸ்ஐ தலைவரை இந்தியாவுக்கு அனுப்புவதாகக் கூறினார் சர்தாரி.
ஆனால், இதையடுத்து அவரை பாகிஸ்தான் ராணுவத் தளபதி இஸ்பாக் கியானி சந்தித்து, ஐஎஸ்ஐ தலைவரை அனுப்ப எதிர்ப்புத் தெரிவித்தார். இதையடுத்து ராணுவ நெருக்கடிக்குப் பணிந்து பல்டி அடித்தார் சர்தாரி.
ஐஎஸ்ஐ தலைவர் அனுப்ப முடியாது, பதிலாக ஒரு பிரதிநிதியை அனுப்புகிறோம் என்றார்.
இந் நிலையில் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ள ஜெய்ஷ் ஏ முகம்மத் தலைவர் மெளலானா மசூத் அஸார், லஷ்கர் ஏ தொய்பாவைச் சேர்ந்த ஹபீஸ் முகம்மத் சயீத், தாவூத் இப்ராகிம், ஹர்கத் உல் முஜாகிதீன், காலிஸ்தான் லிபரேசன் பிரண்ட், ஹர்கத் உல் ஜிகாதி இஸ்லாமி ஆகியவற்றைச் சேர்ந்த 21 பேரை தன்னிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தான் தூதரை அழைத்து வெளியுறவுத்துறை கூறியது.
ஆனால், இவர்களை ஒப்படைக்க மறுத்துள்ளார் சர்தாரி. நேற்றிரவு தேசிய பாதுகாப்புக் கூட்டம் என்ற பெயரில் அனைத்துக் கட்சியினரின் கூட்டம் பிரதமரின் இல்லத்தில் நடந்தது.
இதில் பேசிய அதிபர் சர்தாரி, இந்தியாவுடன் ஒத்துழைக்க பாகிஸ்தான் தயார், இந்தியாவுடன் அமைதிக்கு இந்தியா தயார், இந்தியாவுடன் போருக்கும் பாகிஸ்தான் தயார் என்று கூறியுள்ளார்.
இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய சர்தாரி,
இந்தியா கொடுத்த பட்டியலி்ல் உள்ளவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்களைத் தரவில்லை. முதலில் இந்தியா ஆதாரங்களைத் தரட்டும். போதிய ஆதாராங்கள் இருந்தால் அவர்களை பாகிஸ்தான் மண்ணிலேயே வைத்து, பாகிஸ்தான் நீதிமன்றங்களிலேயே விசாரித்து தண்டனை தருவோம். ஆனால் அதற்கு ஆதாரம் வேண்டும்.
அதே போல பட்டியலில் உள்ள தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானிலேயே இல்லை.
மேலும் இப்போது இந்தியாவிடம் பிடிபட்டுள்ள அஜ்மல் அமீர் கஸாவ் பாகிஸ்தானைச் சேர்ந்தவனே அல்ல. அதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்றார் சர்தாரி.
பிரணாப் படு கோபம்:
சர்தாரியின் இந்த பேட்டி குறித்து டெல்லி செளத் பிளாக்கில் உள்ள தனது அலுவலகத்துக்கு காரில் வந்திறங்கிய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் நிருபர்கள் கூறியபோது, சர்தாரி என்ன சொன்னார் என்று கேட்டார்.
நிருபர்கள் அதை விளக்கியபோது, முகம் சிவந்தபடி கடும் கோபத்துடன் தனது அலுவலகத்துக்குள் சென்றார் பிரணாப். நிருபர்களுக்கு பதில் ஏதும் தரவில்லை.
ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐயின் நெருக்கடிக்குப் பணிந்தே சர்தாரி இவ்வாறு பேசியுள்ளதாகத் தெரிகிறது. அங்கு ஜனநாயக அரசுகள் ஆட்சியில் இருந்தாலும் பேருக்குத்தான் ஜனநாயகம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அங்கு எல்லாவற்றையும் நிர்ணயிப்பது ராணுவமும் அதன் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐயும் தான்.












Click it and Unblock the Notifications