மும்பைத் தாக்குதலுக்குத் திட்டமிட்டது லஷ்கர் அமைப்பின் பஹீம்?

மும்பைத் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக பல்வேறு தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக இந்திய புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து அமெரிக்க எப்.பி.ஐ, இங்கிலாந்து உளவுத்துறை உள்ளிட்டவையும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளன.
இந்த தொடர் விசாரணையில், பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் லஷ்கர் இ தொய்பா அமைப்புதான் இதற்குக் காரணம் என்ற பொதுவான கருத்து வெளிப்பட்டுள்ளது. இந்த அமைப்புடன் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. சம்பந்தப்பட்டுள்ளதாகவும் வலுவான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.
இந்த நிலையில், தற்போது உ.பி. போலீஸார் மூலம் முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. உ.பி மாநிலம் ராம்பூரில் உள்ள சி.ஆர்.பி.எப் முகாம் மீது கடந்த பிப்ரவரி மாதம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த பஹீம் அன்சாரி என்பவரை உ.பி. போலீஸார் கைது செய்துள்ளனர். இவரிடமிருந்து பல்வேறு வரைபடங்கள் சிக்கியுள்ளன.
அதில் தெற்கு மும்பையின் பல இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது. எனவே பஹீம்தான் மும்பை தாக்குதலுக்கு திட்டமிட்டிருப்பதாக போலீஸார் நம்புகின்றனர்.
பஹீடமிருந்து கைப்பற்றப்பட்ட வரைபடங்களில், தாஜ் மஹால் ஹோட்டல், சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், மும்பை பங்குச் சந்தை உள்ளிட்ட முக்கிய இடங்களும் அடங்கியுள்ளன.
இதுகுறித்து உ.பி. டிஜிபி கூறுகையில், தெற்கு மும்பையின் முக்கிய இடங்கள் குறித்த வரைபடங்கள் பஹீமிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. இவற்றை மும்பை போலீஸாருக்குத் தெரிவித்துள்ளோம் என்றார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை மும்பையில் தங்கியிருந்தான் பஹீம் அன்சாரி. எனவே நிச்சயம் அவன்தான் மும்பைத் தாக்குதலுக்கு திட்டமிட்டிருக்க வேண்டும் என போலீஸார் உறுதியாக நம்புகின்றனர்.
இதைத் தொடர்ந்து பஹீமிடம் விசாரணை நடத்த மும்பை தீவரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸ் படை ஒன்று உ.பி. கிளம்பிச் சென்றுள்ளது.
மேலும், மும்பை போலீஸாரிடம் சிக்கிய தீவிரவாதி கஸாவ் கொடுத்த வாக்குமூலத்திற்கும், பஹீம் அன்சாரி கொடுத்துள்ள வாக்குமூலத்திற்கும் கிட்டத்தட்ட பல ஒற்றுமைகள் உள்ளன. இதுதான், அன்சாரியே மும்பைத் தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருக்க முடியும் என போலீஸார் உறுதியாக நம்புகிறார்கள்.
அதேபோல, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாமின் தலைவன் அபு யூசுப் என்கிற முஜ்ஜைமில்தான் தங்களுக்குப் பயிற்சி அளித்ததாக கஸாவும், அன்சாரியும் தெரிவித்துள்ளனர்.
இந்த முகாம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின், முர்ஷிதாபாத்தில் உள்ள லஷ்கர் இ தொய்பா முகாமாகும்.
அன்சாரியின் தகவலால், பாகிஸ்தானின் தொடர்பு இந்த சம்பவத்தில் இருப்பது மேலும் உறுதியாகியுள்ளது. அன்சாரியிடமிருந்து கைப்பற்றப்பட்ட பாஸ்போர்ட், பாகிஸ்தான் நாட்டு பாஸ்போர்ட் ஆகும். அதில் ராவல் பிண்டி முகவரி உள்ளது. அதில் அன்சாரியின் பெயராக ஹமத் ஹூசேன் என்பது இடம் பெற்றுள்ளது.
மும்பையில் பிடிபட்டுள்ள கஸாவ் கொடுத்த தகவல்கள் உருப்படியானவை, மிக முக்கியமானவை என்றாலும் கூட அன்சாரியிடம் இனிமேல் நடக்கவுள்ள தீவிர விசாரணையில்தான் மிக மிக முக்கியமான திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாங்கள் செய்யவில்லை - லஷ்கர்
இதற்கிடையே, மும்பைத் தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்று லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவரான ஹபீஸ் முகம்மது சயீத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அவுட்லுக் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், தனது நாட்டில் நடக்கும் தவறுகளை மறைக்க பாகிஸ்தானை ஒரு கேடயமாக இந்திய அரசு பயன்படுத்தி வருகிறது. அதன் ஒரு அங்கம்தான் இந்த மும்பை தாக்குதல்.
மும்பைத் தாக்குதலுக்குக் காரணம் இந்தியாவின் உளவுத்துறை சந்தித்த தோல்விதான். இதை மறைக்க என்னை நாடு கடத்த வேண்டும் என இந்திய அரசு கூறி வருகிறது.
லஷ்கர் இ தொய்பா அமைப்பின் சார்பாக நான் சுயேச்சையாக கருத்து தெரிவிக்க முடியாது. உண்மையில் எனக்கும், லஷ்கர் இ தொய்பாவுக்கும் நேரடித் தொடர்பே கிடையாது. நான் ஜமாத்துல் தாவாவின் அமீர் ஆவேன். இருப்பினும் லஷ்கர் இ தொய்பாவுக்கு மக்களைக் கொல்வதில் உடன்பாடு இல்லை என்று என்னால் கூற முடியும் என்று கூறியுள்ளார் ஹபீஸ்.












Click it and Unblock the Notifications