செங்கோட்டை கோர்ட்டில் எஸ்எஸ்.சந்திரன் சரண்
செங்கோட்டை: முன்னாள் அதிமுக எம்.பியும், நடிகருமான எஸ்.எஸ்.சந்திரன் இன்று செங்கோட்டை கோர்ட்டில் சரணடைந்தார்.
செங்கோட்டையில் கடந்த 6-08-08 அன்று காந்தி சிலை முன்பு அதிமுக சார்பில் பொதுகூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் எஸ்எஸ் சந்திரன் தமிழக முதல்வர் கருணாநிதியை மிகவும் தரக்குறைவாகவும், பொது அமைதிக்கு பங்கம் வகிக்கும் வகையிலும் பேசியதாக 7-8-08 அன்று திமுக பேச்சாளர் சக்தி வேல் என்பவர் புகார் செய்தார்.
புகாரை தொடர்ந்து 17-11-08 அன்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் நடிகர் எஸ்எஸ்சந்திரன் இன்று காலை 10.20க்கு செங்கோட்டை நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயக்குமார் முன்பு சரண் அடைந்தார்.
பின்னர் அதிமுக பிரமுகர்கள் லிங்கம், சுப்புராஜ் ஆகியோர் ஜாமீன் உத்திரவாதம் கொடுத்தனர். அதனை தொடர்ந்து நீதிபதி ஜெயக்குமார் நடிகர் எஸ்எஸ் சந்திரனுக்கு ஜாமீன் வழங்கினார்.
அதிமுக சார்பில் வழக்கறிஞர்கள் மாடசாமி, வெங்கடேஷன், கார்த்திகேயன், ஆதிபாலசுப்பிரமணியன் உள்பட 7 பேர் ஆஜர் ஆகினர்.
முன்னதாக கோர்ட்டுக்கு சரணடைய வந்த எஸ்.எஸ்.சந்திரனுக்கு மாவட்ட செயலாளர் பி.செந்தூர்பாண்டியன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.













Click it and Unblock the Notifications