கஸாபிடம் இங். போலீஸ் விசாரணை
மும்பை: மும்பையில் சிக்கிய தீவிரவாதி அஜ்மல் கஸாபிடம், இங்கிலாந்து போலீஸாரும் விசாரணை நடத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பான இங்கிலாந்து போலீஸாரின் விருப்பத்தை பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தபோது தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மும்பை தாக்குதல் சம்பவத்தில் இங்கிலாந்துக் குடிமகன் ஒருவரும், இந்தியாவைச் சேர்ந்த இங்கிலாந்து குடியுரிமை பெற்ற ஒருவரும் உயிரிழந்தனர்.
எனவே கஸாப்பை விசாரிக்க இங்கிலாந்து போலீஸார் ஆர்வமாக உள்ளனர். அதேபோல பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ள லக்வி உள்ளிட்டோரையும் இங்கிலாந்து போலீஸார் விசாரிக்க விருப்பம் கொண்டுள்ளனர். இதுதொடர்பாக பாகிஸ்தான் அதிபர் சர்தாரியுடன் கார்டன் பிரவுன் பேசவுள்ளார்.
லஷ்கர் இ தொய்பா அமைப்பு குறித்தும், அதன் மும்பை தொடர்பு குறித்தும் தீவிரப் புலனாய்வு செய்ய இங்கிலாந்து போலீஸார் மும்முரமாக உள்ளனர்.
டெல்லி வந்திருந்த பிரவுன், நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசிய பின்னர் லஷ்கர் இ தொய்பா அமைப்புதான் மும்பை சம்பவத்திற்குக் காரணம் என உறுதிபடத் தெரிவித்தார் என்பது நினைவிருக்கலாம்.
டி.என்.ஏ சோதனை செய்யும் எப்பிஐ
இதற்கிடையே, மும்பைத் தாக்குதலின்போது பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 9 தீவிரவாதிகளுக்கும் டிஎன்ஓ சோதனை செய்யப்படவுள்ளன. இதற்கான மாதிரிகளை, அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐ மற்றும் இஸ்ரேல், இங்கிலாந்து உளவு அமைப்புகள் எடுத்துள்ளன.
அவர்களுக்கு ஆப்கானிஸ்தான் தொடர்பு உள்ளதா அல்லது பாகிஸ்தானியர்களா என்பதை அறிய இந்த சோதனை நடத்தப்படவுள்ளது.
இவர்களிடம் எடுக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரிகளை சோதனை செய்து, ஏற்கனவே தங்கள் வசம் உள்ள தீவிரவாதிகளின் டி.என்.ஏ மாதிரிகளுடன் ஒப்பிட்டுப் போர்க்கவுள்ளனர். இதன் மூலம் இந்தத் தீவிரவாதிகளின உண்மையான நாடு குறித்து தெரிய வரும் என, குறிப்பாக ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளுக்கும், இவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது தெரிய வரும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்த 9 பேர் மற்றும் கஸாப்பின் டி.என்.ஏ மாதிரிகளை இந்திய பாதுகாப்புப் படையினர் சேகரித்து வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர மும்பை சம்பவத்தின்போது பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்களின் தன்மை குறித்தும் மேற்கத்திய புலனாய்வு அமைப்பினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
அவற்றுக்கும், ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் பயன்படுத்தி வரும் ஆயுதங்களுக்கும் இடையே சில ஒற்றுமைகள் இருப்பது தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.
லஷ்கர் இ தொய்பா அமைப்பு சில தீவிரவாதிகளை, தலிபான்களுடன் இணைந்து போராட ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியிருந்தது. மேலும், ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் பகுதியில் உள்ள முகாமிலும் லஷ்கர் அமைப்பினருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அங்கு பயிற்சி பெற்றுத் திரும்பியவர்கள் மும்பைத் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
கஸாப் உயிருடன் சிக்கியுள்ளதால், தீவிரவாதிகள் குறித்த பல முக்கிய தகவல்கள் எந்தவித கஷ்டமும் இன்றி இந்தியப் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்துள்ளது. இதற்கு முன்பு நடந்த தீவிரவாதத் தாக்குதல்களின்போது நேரடிக் குற்றவாளிகள் பெரும்பாலும் சிக்கியதில்லை. ஆனால் முதல் முறையாக சம்பவத்தில் ஈடுபட்டவனே கிடைத்திருப்பதால் விசாரணை எந்தவித சுணக்கமும் இன்றி போய்க் கொண்டிருப்பதாக விசாரணை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.